வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (12:46 IST)

விராட் கோலியை பார்த்து காப்பியடிக்கும் பாகிஸ்தான் வீரர் - உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது

“நான் விராட் கோஹ்லி பேட்டிங் செய்யும் வீடியோக்களை பார்த்துதான் பயிற்சி எடுத்து வருகிறேன்” என நேரடியாகவே சொல்லி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம்.

உலக கோப்பை வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு தூக்கம், சாப்பாடு எதுவுமே தேவைப்படாது. அந்தளவுக்கு டி.வியிலேயே மூழ்கி கிடப்பார்கள். அதுவும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றால் சொல்ல தேவையே இல்லை. உலக நாடுகளில் உள்ள அத்தனை கிரிக்கெட் ரசிகர்களின் இதய துடிப்பையும் எகிற செய்யும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நாளை ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஒரு உலக கோப்பை ஆட்டத்தில் கூட பாகிஸ்தானால் இந்தியாவை வெற்றிபெற முடியவில்லை என்ற கூற்றை இந்த முறை முறியடிப்போம் என பாகிஸ்தான் அணி சூளுரை கொடுத்து கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் பாபர் அசாம் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பேட்டிங் செய்யும் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று வருகிறார். ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் எதிராக கோஹ்லி ஆடும் லாவகம், ஒவ்வொரு பந்தையும் அப்படி அடிக்க வேண்டும் என கன நேரத்தில் முடிவு செய்யும் அவரது துல்லியம் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து அதைபோலவே தனது பேட்டிங்கையும் மாற்றி வருகிறாராம்.

இது பற்றி நிருபர்களிடம் பாபர் அசாம் “விராட் கோஹ்லியின் ஆட்டத்தை சில நாட்களாகவே வீடியோவாக பார்த்து வருகிறேன். அவரது பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போதே மலைப்பாக இருக்கிறது. பல்வேறு சூழல்களில் அவர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை பார்த்து அதை போலவே நானும் பின்பற்ற நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

“உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது” என்பது போல் எவ்வளவு காப்பியடித்து பேட்டிங் செய்தாலும் கோஹ்லியை மிஞ்ச முடியாது என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.