வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (12:44 IST)

நானா படேகர் மீது வழக்குப் பதிவு –இந்தியன் மி டூ எதிரொலி

நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரை ஏற்று உசிபாரா காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இந்தியன் மிடூ எனப்படும் பெண்களின் மீதான பாலியல் தொல்லைகள் பற்றி முதன்முதலாக பேசியவர் நடிகை தனுஸ்ரீ தத்தாவே ஆவர்.

கடந்த மாதம் அவர் அளித்த ஒரு பேட்டியில் ’2008–ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதற்கு அந்தப் படத்தின் இயக்குனர் ராகேஷ் சாரன் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா இருவரும் உடந்தையாக இருந்தனர். அதுகுறித்து அப்போது நான் கூறிய போது நானா ஆட்களை வைத்து என்னை மிரட்டினார்.’ என கூறிச் சர்ச்சையைக் கிளப்பினார்.

இதற்குப் பதிலளித்த நானா படேகர் ‘‘என் மீது தனுஸ்ரீதத்தா கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் என்பதற்கு அர்த்தம் என்ன? படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் உட்கார்ந்து இருந்தோம். எங்களை சுற்றி 200 பேர் அமர்ந்து இருந்தார்கள். இதில் எப்படி பாலியல் பிரச்சினை ஏற்பட்டது. அவர் வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். யார் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்’ எனக் கூறினார்.

இதையடுத்து நானா படேகருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த சர்ச்சை ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது உசிபாரா காவல்நிலையத்தில் நானா படேகர் உள்பட படத்தின் இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் 354 மற்றும் 509 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நால்வரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.