வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (15:09 IST)

பாலகோட் விமானத் தாக்குதல்: உண்மையை மறைக்க முயல்கிறதா பாகிஸ்தான்?

இந்திய விமானப்படை விமானங்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத குழுவின் பெரியதொரு முகாமை பிப்ரவரி 26ம் தேதி காலை தாக்கி அழித்துள்ளதாக இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.



பாகிஸ்தான் எல்லைக்கப்பால் உள்ள பாலகோட் என்ற இடத்தில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் பெரியதொரு முகாமை தாக்கி அழித்திருக்கும் இந்த தாக்குதல்கள் ராணுவ நடவடிக்கை அல்ல பாதுகாப்பு நடவடிக்கையே என்றும், தற்கொலை தாக்குதல்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கோகலே விவரித்துள்ளார்.

காலையில் வெளியான தகவல்களில் பாலகோட், சாகோதி மற்றும் முசாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜய் கோகலே பாலகோட்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாலகோட் இருப்பதாக அதிகார வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் இந்த பாலகோட் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

பிபிசி உருது சேவையுடன் பேசிய உள்ளூர் மக்கள் சத்தமான வெடிப்பை கேட்டதை உறுதி செய்துள்ளனர். ஆனால், இந்த வெடிப்பு சத்தம் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.பாதுகாப்பு படைப்பிரிவுகள் அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. எனவே அங்குள்ளோரை தொடர்பு கொள்வது எளிதான காரியமல்ல.

இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை பற்றிய விவரங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. எனவே, நம்பிக்கையற்ற பதிலையே மக்கள் வழங்கி வருகின்றனர்.
இந்தியாவின் வான் தாக்குதலை நிராகரித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி, அதனை இந்தியாவின் அரசியல் தேவைகளோடு தொடர்பு படுத்தி பேசியுள்ளார்.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட இழப்பு பற்றி எதுவும் இதுவரை தெரியவில்லை.இந்தியா கூறுவது உண்மை என்றால், இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள ராஜீய அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.

அணு குண்டு அச்சுறுத்தல்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதா?




பாகிஸ்தான் பாதுகாப்பு விவகார நிபுணரும், ஆசிரியருமான ஆயிஷா சித்திக் பேசுகையில், "அரசியல் மற்றும் ராஜீய ரீதியில் இந்த தாக்குதல் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்."ராஜீய ரீதியில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் (அணு ஆயுதங்கள்) போலியானது என்று இந்தியா நிரூபித்துள்ளது. பின் லேடன் கொல்லப்பட்ட அபோட்டாபாத்திற்கு அருகில் பாலகோட் இருப்பது கவனிக்கத்தக்கது," என்று அவர் கூறுகிறார்.

இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தின் படங்கள் வெளியில் செல்லாதவாறு பாகிஸ்தான் படை பாதுகாக்க முயலும். இதன் மூலம் இது பற்றிய பிற படங்களை அவர்கள் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இந்த தாக்குதல் நடைபெற்ற இடம் பற்றிய அதிக தகவல்களை பெற முயற்சிப்பதாகவும், ஆனால், கிடைக்கவில்லை என்றும் ஆயிஷா தெரிவிக்கிறார்.

விமானப்படை தளபதி உதய் பாஸ்கர், "அணு ஆயுதங்களின் பெயரால் பாகிஸ்தான் விடுத்து வந்த அச்சுறுத்தல்களுக்கான பதிலடியே இந்த தாக்குதலாகும்," என்று கூறுகிறார்.