1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (14:04 IST)

எல்லையில் தொடரும் பதட்டம் – தள்ளிப்போகுமா தேர்தல் ?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அடுத்தடுத்து எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இருநாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் முழுவதிலும், இந்தியாவில் எல்லையில் உள்ள 5 விமான நிலையங்களிலும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டு வருகின்றனர். அபாயகரமானப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இரண்டு நாடுகளும் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாடுகளிலும் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.

இதனால் இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கும் தேர்தல் தள்ளிப்போகும் சூழல் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல்கள் நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைய பரபரப்பான சூழலில் தேர்தல் அறிவிப்பு தேதி ஒத்திப்போடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இன்றையப் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடிக் கொடுத்து மீண்டும் ஒருத் தாக்குதலை நடத்தினால் நிலைமை இன்னும் அபாயகரமானதாக மாறும். இது குறித்து சற்று முன்னர் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எல்லையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அறிவித்துள்ளது கவனிக்கப்படதக்கதாக மாறியுள்ளது.

அதனால் தேர்தலை விட நாட்டின் பாதுகாப்பே இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் இத்தகைய சூழலில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது. எனவே இப்போது இருக்கும் அசாதரண சூழலே தொடருமானால் நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.