1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (21:54 IST)

காசெம் சுலேமானீ கொலை மூன்றாம் உலகப் போரைத் தூண்டுமா?

இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
 
இந்த பதற்றம் குறித்து பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்க்கஸ் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்.
 
மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் உள்ளதா?
 
இரானுக்கு எதிராக அமெரிக்கா போரை அறிவிப்பதற்காகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளார் என பலர் விவரிக்கின்றனர். இந்த விவகாரத்தை மிகைப்படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது.
 
இது மூன்றாம் உலகப் போரை தூண்டாது. பொதுவாக இத்தகைய மோதலில் ஈடுபடக் கூடிய சீனாவும் ரஷ்யாவும், இந்த விவகாரங்களில் தலையிடவில்லை.
 
ஆனால், அமெரிக்க அரசின் நடவடிக்கையால், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் அவர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
 
இரானின் பதிலடியை நிச்சயம் எதிர்பார்க்க வேண்டிய தருணம் இது. இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்கு இடையேயான பகை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 
இரானின் பதில் நடவடிக்கை, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக அமையலாம்.
 
அதேபோல இரானை பாதிக்கக்கூடிய வகையில் அமெரிக்கா வைக்கும் இலக்கை முறியடிக்கும் வகையிலும் இரான் செயல்படும்.
 
சர்வதேச சட்டத்தின்கீழ் ஒருவரை கொள்வது சரியா?
இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த இரான் திட்டமிட்டிருந்ததால் இவ்வாறானா நடவடிக்கை மேற்கொண்டதாக அமெரிக்கா வாதிடுகிறது.
 
நடக்காத குற்றச்செயலுக்காக முன்கூடியே தற்காத்துக்கொள்ளும் நோக்கத்தில் ஒருவரை கொலை செய்வது சட்டபூர்வமாக நியாயம் அல்ல, என நோட்ர டாம் ஸ்கூல் ஆஃப் லாவின் சட்ட பேராசிரியர் மேரி எலன் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் தற்காப்புக்காக, தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை.
 
ஜெனரல் காசெம் சுலேமானீ பாக்தாதில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டது, அமெரிக்க மீதான ஆயுத தாக்குதலுக்கு பதிலடி இல்லை. மேலும் அமெரிக்காவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பிராந்தியத்துக்குள்ளும் இரான் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.