வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:40 IST)

உடல் பருமனான நண்பருடன் பழகுகிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்காகதான்

புத்தாண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை செய்யப் போவதாக நிறையப் பேர் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்.
ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளைக் குறைப்பது அல்லது வார இறுதி நாட்களில் உடல் ஆரோக்கியத்துக்கான வகுப்புகளில் பங்கேற்பது என்பது போன்ற உறுதிமொழிகளை பலர் எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரும், நண்பர்களும் இதுபோன்ற மாற்றங்களைச் செய்யும் போது, தாங்களும் அதே மாதிரி செய்யப் போவதாகக் கூறுவார்கள்.
 
இருந்தாலும் நமது ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் எல்லா முடிவுகளும், விரும்பி மேற்கொள்ளப்படுபவை அல்ல. நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினர், நமக்குப் பிடித்தவர்களின் செயல்பாடுகளை நாமும் பின்பற்றுவதால் அது நிகழ்கிறது.
 
துரதிருஷ்டவசமாக புகைபிடித்தல் அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் போன்ற, நமது ஆரோக்கியத்துக்குக் கெடுதல் ஏற்படுத்தக் கூடிய பழக்கங்களையும் நாம் பின்பற்றுகிறோம்.
 
தொற்றும்தன்மை இல்லாத இருதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் போன்றவை இதனால் ஏற்படலாம்.
 
நீங்கள் உடல் பருமனாவதற்கு உங்கள் நண்பர்கள் காரணமாக இருப்பார்களா?
 
நாம் மதிப்பு கொடுப்பவர்கள் மற்றும் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்கள் நமது சமூக வட்டத்தை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள். மசாசுசெட்ஸ்-ல் உள்ள பிரமிங்ஹாம் நகரில் குடியிருக்கும் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை 1940களின் பிற்பகுதியில் இருந்து தொடர்ந்து கண்காணித்து, பிரமிங்ஹாம் இருதய ஆய்வு அமைப்பு சமூக வட்டத்தின் தாக்கம் குறித்து அறிக்கை தயாரித்தது.
 
தனது சமூக வட்டத்தில் ஒருவர் உடல் பருமனாகும் நிலை ஏற்பட்டால், ஆய்வுக்குரியவரும் உடல் பருமன் நிலைக்கு ஆளாகிறார் என்று அந்த ஆய்வில் தெரிய வந்தது. அது நண்பராக இருந்தால் 57 சதவீதமும், உடன் பிறந்தவராக இருந்தால் 40 சதவீதமும், வாழ்க்கைத் துணைவராக இருந்தால் 37 சதவீதமும் இதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டது.
 
இருவரும் ஒரே பாலினத்தவர்களாக இருந்தால் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. அந்த நபரைப் பற்றி இவர் எந்த அளவுக்கு தீவிர நட்பு கொண்டிருக்கிறார் என்பதைப் பொருத்தும் இது மாறுபடுகிறது.
 
மசாசுசெட்ஸ்-ல் உள்ள பிரமிங்ஹாம் நகரில் 1948ல் இருந்து மிக நீண்ட காலமாக இருதய ஆரோக்கியம் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
 
உதாரணமாக, ஒரு நபர் தினமும் பக்கத்து வீட்டு நபரை பார்ப்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பு இல்லாத நிலை இருந்தால், உடல் எடையில் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை என்று பிரமிங்ஹாம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
நட்பு தான் முக்கியம் என்று கருதும் நிலையில், அவருடைய ``நண்பரின்'' எடை கூடினால் அவருடைய எடையும் கூடுகிறது. ஆனால் நட்புக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் அப்படி நிகழ்வது இல்லை.
 
விவாகரத்து, புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கமும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தாக்கத்தால் பரவுகிறது.
 
இதில் தெரிய வந்திருக்கும் விஷயங்கள் முக்கியமானவை. நம் அனைவருக்கும் வயதாகிறது என்றாலும், சில சூழ்நிலைகள் நமக்கு ஒத்துவராது என்றாலும், பின்வரும் வகையிலான சில மனப்போக்குகள் காரணமாக, தொற்றும் தன்மையில்லாத நோய் ஆபத்துகளுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது:
 
·புகைபிடிக்கும் பழக்கம்
 
·உங்கள் உணவுப் பழக்கம்
 
·உடல் இயக்க செயல்பாடுகளில் எந்த அளவுக்கு ஈடுபடுகிறீர்கள்
·எவ்வளவு மது அருந்துகிறீர்கள்
 
இருதய நோய், பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு மற்றும் நுரையீரல் நோய் போன்ற தொற்றும் தன்மை இல்லாத நோய்கள் உலக அளவில் 10 மரணங்களில் ஏழு மரணங்களுக்கு காரணமாக உள்ளன, பிரிட்டனில் 90 சதவீத மரணங்களுக்குக் காரணமாக உள்ளன.
 
உணர்ச்சிகள் பரவுகின்றன
நமது மனப்போக்கு மற்றும் மனநிலையில் சமூக வட்டமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 
பிரபலமானவர்களைப் பார்த்து டீன்ஏஜ் வயதினரிடம் புகைபிடிக்கும் பழக்கம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை. வளர் இளம்பருவத்தில் உள்ள பிரபலமான ஒருவர் புகைபிடித்தால், பரவலாக புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிக்கிறது, அதைக் கைவிடுவோரின் எண்ணிக்கை குறைகிறது.
 
நண்பர்கள் உற்சாகக் குறைவு அடைந்தால் இளம் வயதினரின் உற்சாகமும் குறைந்துவிடுகிறது. இவருக்கு உற்சாகம் குறைந்தால் அவருக்கும் குறைகிறது.
 
இந்த அறிகுறிகள் மருத்துவ ரீதியிலான மன அழுத்தம் ஏற்படுத்துவதாக, பரவக் கூடியதாக இல்லை. ஆனால், டீன்ஏஜ் பருவத்தினரின் உற்சாகக் குறைபாடு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து, சில நேரங்களில் பிற்காலத்தில் மருத்துவ ரீதியில் மன அழுத்தம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடுவது உண்டு.
 
உணர்வுகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது, 700,000 முகநூல் பயனாளர்களிடம் நடத்திய சர்ச்சைக்குரிய ரகசிய பரிசோதனையின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
 
நண்பர்களின் முகநூல் பதிவு மற்றும் பயனாளர்களின் பதிவுகளைக் கண்டறிந்து, பிரித்துப் பார்த்து இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.
 
நேர்மறை உணர்வுகளில் உள்ள நண்பர்களைப் பற்றிய ஓர் ஆய்வும், எதிர்மறை உணர்வுகளில் உள்ள நண்பர்கள் குறித்து இன்னொரு ஆய்வும் நடத்தப்பட்டன.
 
நேர்மறை சிந்தனை சூழ்நிலையில் உள்ளவர்களின் நண்பர்களும் அதே மனநிலையில் இருந்தனர். அதாவது சமூக வட்டத்துக்குள் நேருக்கு நேர் பார்த்திராத அல்லது உடல் மொழி குறித்த குறிப்புகள் எதுவும் இல்லாத நிலையிலும், உணர்வுகள் பரவுகின்றன என்பதை நிரூபிப்பதாக இது உள்ளது.
 
ஏற்கெனவே நமது மனப்போக்கில் உள்ளவர்களுடன் அல்லது நமது சூழ்நிலையில் உள்ளவர்களுடன் தான் நாம் சமூக வட்டத்தில் நட்பு ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது எங்களுடைய ஆய்வு பற்றிய விமர்சனங்களில் ஒன்றாக இருந்தது. இது சமூகத்தொற்று என்ற வகையைச் சேர்ந்தது என பல ஆய்வுகள் கூறுகின்றன.