1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
  4. Karunas statement about LTTE ban

விடுதலைப்புலிகளுக்கான தடை: இந்திய அரசுக்கு கருணாஸ் அறிவுரை

karunas
சமீபத்தில் விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியது. கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் புலிகளால் எந்தவித வன்முறையையும் ஏற்படவில்லை என்பதே இந்த தடை நீக்கியதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து இந்தியா, உள்பட அனைத்து நாடுகளும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவும், நகைச்சுவை நடிகருமான கருணாஸ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தடையை நீக்கி அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு தமிழர்களுக்கான ஜனநாயகத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் சொல்லியிருக்கும் உண்மையான காரணம் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்படவில்லை. அந்த அமைப்பின் பெயரில் எந்த வன்முறையும் எங்கும் நடைபெறவில்லை. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை தேவையற்றது. இந்தத் தீர்ப்பை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்புப் பற்றி கூறியுள்ள உண்மை இந்தியாவுக்கும் பொருந்தும். இந்தியா மட்டுமின்றி ஏனைய நாடுகளுக்கும் பொருந்தும். ஈழத் தமிழர்களுடன் இன உணர்வு கொண்ட 9 கோடி தமிழர்கள் இந்தியாவில் வாழ்கின்றோம். எனவே, தமிழர்களின் உணர்வுகளையும் இந்திய அரசு புரிந்துகொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். 
 
ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்துக்காட்டி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு மக்கள் இயக்கம். தேசிய இன விடுதலை இயக்கம். ஆனால், அதைப் பயங்கரவாத இயக்கங்களோடு சேர்த்து தடைவிதித்து ஒரு பின்னடைவை ஏற்படுத்திவிட்டார்கள். அமெரிக்க ஆதரவு நாடுகள் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பல நாடுகளை ஒருங்கிணைத்தபோது, அமெரிக்கா அதனை விடுதலைப் புலிகள் பக்கம் திருப்பிவிட்டது. அதனால்தான் இவ்வளவு பெரிய பின்னடைவு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்டானது என்பதை அனைவரும் அறிவர். தமிழீழ இனம் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கு சான்று இந்தத் தீர்ப்பு” 
இவ்வாறு நடிகர் கருணாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
டிரம்ப்பின் மனைவியும் மகளும் போட்டி போடுவது எதற்கு தெரியுமா?