1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 14 அக்டோபர் 2014 (10:58 IST)

சூப்பர் லீக் கால்பந்து போட்டி: கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் யுனைடெட்

8 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
 
ஐ.பி.எல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள். இப்போட்டிகள் அக், 12 தொடங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அக், 13 நேற்று இரவு நடந்த 2 ஆவது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வீரர் இன் ஹுமெ கோல் அடித்ததை நடுவர்கள் ஆப்-சைடு என்று அறிவித்தனர். பின், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியினர் அடித்த கோல் முயற்சிகள் அனைத்தும் வீணானது.
 
ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கோல் அடித்தது. அந்த அணியைச் சேர்ந்த டேவிட் நிகெய்ட் என்ற வீரர் கொடுத்த பந்தை பெனால்டி பாக்ஸ் கார்னரில் நின்ற ஜெர்ஜியோ கோக் தாழ்வாக கோலை நோக்கி அடித்தார். 

இறுதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழத்தியது. மேலும் அக், 14 இன்று 7 மணிக்கு நடைபெறும் 3 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-புனே சிட்டி அணிகள் மோதவுள்ளன.