வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (16:02 IST)

தனியாளாக போராடிய ஹிட்மேன் – 34 ரன்னில் மண்ணைக் கவ்விய இந்தியா !

ஆஸ்திரேலியா நிர்ணயித்த 289 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோற்றுள்ளது.

சிட்னியில் இன்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்த அணியின் கவாஜா(59), ஷான் மார்ஷ் (54), ஹான்ஸ்கோம்ப்(79) மற்றும் ஸ்டாய்னஸ் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸி வலுவான ஸ்கோரை எட்டியது. இந்திய தரப்பில் புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 289 ரன்கள் என்ற வலுவான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தவான் (0), கோஹ்லி(3), ராயுடு (0) என வந்த வேகத்தில் நடையைக் கட்ட இந்தியா 4 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

இதனையடுத்து ரோஹித்துடன் கைகோர்த்தார் தோனி. ரோஹித் நிதானமாக ஆடி ரன்கள் சேர்க்க மறுமுனையில் தோனி நங்கூரம் பாய்ச்சினார். இதனால் ரன்ரேட் அதளபாதாளத்திற்குப் போனது. இந்த ஜோடி 4 ஆவது விக்கெட்டிற்கு 137 ரன்கள் சேர்த்தது. 96 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த தோனி பெஹரோஃப் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (12), ஜடேஜா (8) ஆகிய வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப நிலைத்து நின்ற ரோஹித் தனது 22 ஆவது சதத்தை நிறைவு செய்தார். இதற்கிடையில் இந்திய அணியின் தேவைப்படும் ரன் ரேட் வானளாவ உயர்ந்தது. சதத்திற்குப் பின்னர் அதிரடியாக விளையாடிய ரோஹித் 129 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்து ஸ்டாய்னிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் இந்திய அணியின் தோல்வி கிட்டதட்ட உறுதியானது. அதன் பின்னர் வந்த புவனேஷ்வர்குமார் 29 ரன்களும், குல்தீப் யாதவ் 3 ரன்களிலும் ஷமி 1 ரன்னிலும் அவுட் ஆகினர். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரிச்சர்ட்ஸன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.