தீப்பந்தத்தால் உரசிக் கொண்டும், தீக்குழியில் இறங்கி நடனமாடியும் எந்த தீக்காயமும் ஏற்படுவதில்லை. எங்கே? எப்படி? என்று கேட்கத் தோன்றுகிறதா?
இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஷோரானூர் என்ற கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம். இங்கு பக்தியின் உச்சத்தில், ஒரு சிலர் நெருப்பை உரசிக் கொள்ளும் அளவிற்கு செல்கின்றனர். ஆனால் தீப்பந்தத்தால் அவர்களது உடலில் உரசினாலும் தீக்காயம் எதுவும் ஏற்படுவதில்லை. சுவாமி ஐயப்பனின் விளக்கு பூஜை நடக்கும் அந்த கிராமத்திற்குள் செல்வோம்.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாக ஐயப்ப பக்தர்கள் நடத்தும் பூஜைதான் ஐயப்பன் விளக்கு பூஜை. இந்த பூஜை கேரளாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. மேலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த விளக்குப் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு தனிப்பட்ட நபரோ, ஒரு குடும்பத்தினரோ, ஒரு அமைப்போ அல்லது ஒரு குழுவோ ஐயப்பன் விளக்கு பூஜையை நடத்தலாம். இந்த விளக்கு பூஜையின் போது அந்த இடத்தில் தென்னைமர ஓலை மற்றும் வாழைப்பட்டைகளைக் கொண்டு சபரிமலைக் கோயிலின் தோற்றத்தை செய்து வைத்திருப்பர். இது மிகவும் கைதேர்ந்த கலைஞர்களைக் கொண்டு செய்யப்படுகிறது.
அங்கு மாலை நேரத் துவக்கத்திலேயே வாத்தியக் குழுவினர் இசைக்க ஆரம்பித்துவிடுவர். ஐயப்பனின் பக்திப் பாடல்களும் இசைக்கப்படும். இதனிடையே ஐயப்பனுக்கு பூஜைகளும் நடத்தப்படும். ஐயப்ப விளக்கு பூஜையின் நிறைவாக குருதி என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குருதி நிகழ்ச்சியில் பூசாரி அல்லது குறி சொல்பவர் போன்று ஒருவர் வாழைப்பட்டைகளால் அமைக்கப்பட்ட ஐயப்பன் கோயிலைச் சுற்றி நடனமாடுகிறார். அந்த நடனத்தின் போது அவர் செய்யும் சில செயல்கள் பார்ப்பவர்களை அதிசயிக்க வைக்கிறது.
|