சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (09:37 IST)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்? கலக்கத்தில் எஸ்.பி.வேலுமணி! – முதல்வர் கையில் கிடைத்த அறிக்கை!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் நியமித்த குழு 200 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்ட “ஸ்மார்ட் சிட்டி” பணிகள் நாடு முழுவதும் முதற்கட்டமாக 100 நகரங்களில் செயல்படுத்தப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம், தஞ்சை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு பணிகளுக்கு தேர்வாகின.

இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு தேவையான நிதியில் 50 சதவீத்தத்தை மத்திய அரசு, 50 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். அதன்படி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.490 கோடி மத்திய அரசு வழங்கியிருந்தது. தமிழ்நாடு அரசு ரூ.500 கோடி வழங்கியது.

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த வளர்ச்சி பணிகளில் பல்வேறு இடங்களில் டெண்டர் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன.

ஸ்மார்ட்சிட்டி முறைகேடுகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை அளிக்க தற்போதைய முதல்வர் மு .க.ஸ்டாலின் சிறப்பு குழுவை அமைத்தார். பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அந்த குழு 200 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளது. அதை தொடர்ந்து இந்த அறிக்கை தொடர்பான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த சில மாதங்கள் முன்னதாக அமலாக்கத்துறை ரெய்டு நடந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி முறைகேடு வழக்கிலும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.