பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் குறியீட்டு எண்களும் குறைந்து வருகின்றன. இதனால் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி நேரடியாக முதலீடு செய்துள்ளவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் நேரடியாக முதலீடு செய்தவர்களுடன் ஒப்பிடுகையில், யூலிப் திட்டத்தின் வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் நஷ்டம் குறைந்த அளவில் உள்ளது.
(காப்பீடு நிறுவனங்கள், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியத்தை (காப்பீடு தொகை) பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. இதில் இருந்து வரும் வருவாயை, காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு திருப்பித் தருகின்றன. இந்தத் திட்டமே ஆங்கிலத்தில் யூனிட் லிங்க்ட் இன்ஷ்யூரன்ஸ் பிளான் என கூறப்படுகிறது. இதை சுருக்கமாக யூலிப்ஸ் என அழைக்கின்றார்கள்)
இந்த வருடம் ஜனவரி 10 ந் தேதியில் இருந்து, கடந்த வாரம் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 30 விழுக்காடு குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் ஒன்பது யூலிப் திட்டங்களின் கீழ் பங்குச் சந்தையின் முதலீடூ செய்தவைகளின் மதிப்பு 20 விழுக்காடுதான் குறைந்துள்ளது. இந்த யூலிப் திட்டங்களின் முதலீட்டை கையாளும் நிபுணர்கள், பங்குச் சந்தையின், குறிப்பிட்ட பங்குகளின் விலை நிலவரத்தை கணித்து, பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதற்கு பதிலாக மற்ற பங்குகளை வாங்கியுள்ளனர். இதனால் தான் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில், யூலிப் முதலீடு மதிப்பு குறைவது குறைவாக இருக்கின்றது.
இதை வேறு மாதிரியாக கூறுவது என்றால், நீங்கள் நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் ஏற்படும் நஷ்டத்தை விட, யூலிப் திட்டத்தின் மூலம் முதலீடூ செய்திருந்தால் நஷ்டம் குறைந்திருக்கும்.
காப்பீடு செய்து கொள்பவர்களிடம் இருந்து யூலிப் திட்டத்தின் மூலம் பெறப்படும் பணம், பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி போன்ற பிரிவுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. உள்நாட்டு பொருளாதார நிலைமை, அயல் நாடுகளின் நிலவும் சூழ்நிலை உட்பட, பல்வேறு காரணங்களினால் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைவதும், மீண்டும் அதிகரிப்பதும் நடக்கின்றன.
|