சரக்கு முனையத்தில் ஏற்படும் நெருக்கடியை குறைக்கவும், சர்வதேச தரத்திற்கு சர்வதேச முனையத்தை உயர்த்தவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இத்துடன் இந்திய விமான நிலையங்களின் ஆணையம், சரக்கு முனைய கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த சங்கத்தின் தலைவர் ஜி.எஸ். மதன், இந்திய விமானநிலையங்களின் ஆணையத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இப்பொழுது உள்ள சூழ்நிலையில், இலவச நேரத்தை குறைக்கும் முடிவை அமல்படுத்தாமல் ஒத்திவைக்க வேண்டும். இந்த முடிவை அமல்படுத்துவதற்கு முன்பு, இதில் தொடர்புடைய அனைவரின் சம்மதத்தையும் பெற வேண்டும். இதை அமல்படுத்தும் வகையில், தேவையான எல்லா உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதும், சரக்கு முனைய நெருக்கடியை குறைக்கும் அரசின் முடிவு பாராட்டத்தக்கதே. அதே நேரத்தில் விமான நிலையங்களின் சரக்கு முனையத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், சரக்குகள் கையாளும் வசதி, மற்றம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும், சிக்கலான பரிசோதனை அனுமதி, நடைமுறைகள் போன்ற பிரச்சனைகளால், சரக்குகளை வைக்கும் நேரத்தை குறைப்பது சாத்தியப்படாது.
இந்த முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களின் கருத்தை கேட்டு, கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது வருந்தத்தக்கது. குறிப்பாக அதிகளவு பாதிக்கப்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களின் கருத்தை கேட்காதது வருந்தத்தக்கது என்று ஜி.எஸ்.மதன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் தங்களுடைய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று த.தொ.மென்பொருள் நிறுவனங்களிலிருந்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள்வரை குமுறிக்கொண்டிருக்கையில், சரக்கு முனைய கட்டணமற்ற காலத்தை குறைக்கும் மத்திய அரசின் முடிவும், சரக்கு முனைய கட்டணத்தை உயர்த்துவது என்கின்ற விமான நிலையங்கள் ஆணையத்தின் முடிவும் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தின் மீது மேலும் சுமையேற்றியுள்ளது.
|