நமது இதிகாசம் கூறும் நட்பு : கர்ணன் - துரியோதனன். தோழமை என்ற ஒரே வலிமையான ஆயுதத்திற்காக, சொந்தம் என்று தெரிந்தும் பாண்டவர்களை போரில் எதிர்த்து நின்றான் கர்ணன்.
ஒருமுறை துரியோதனின் மனைவியும், கர்ணனும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனின் மனைவி அணிந்திருந்த முத்துமாலையை கர்ணன் பற்றி இழுக்க அது அறுந்து சிதறி கீழே விழுந்தது.
அத்தருணம் அங்கே துரியோதனன் வர, நண்பனின் மனைவியிடம் தவறாக நடந்து விட்டோமோ என்ற பதைபதைப்பில் கர்ணன் நிற்க, செய்வதறியாது திகைத்து நின்றாள் துரியோதனன் மனைவி.
தனது நண்பனை சிறிதும் சந்தேகப்படாத துரியோதனன், சிதறிய முத்துக்களை 'எடுக்கவோ, கோர்க்கவோ' என தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.
நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்,என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் இவர்கள்.
ஆனால்...
ஆண்-பெண் நட்பு என்றால் அங்கு காதல் புகுந்து விடுகிறது. இல்லையேல் காமம் தலைதூக்குகிறது என்ற அவலமான சமூகப் பார்வை இன்றைய இளைய சமுதாயம் மீது படர்ந்துள்ளது.
துளியே கடல் என்கிறது காமம்
கடலே துளி என்கிறது நட்பு
என்றார் புதுக்கவிஞர் அறிவுமதி.
அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.
இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.
இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு - என்றார் வள்ளுவப் பெருந்தகை.
சிரித்து மகிழ, நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு. சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது, தடுத்து நிறுத்தி கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான் புகழ் கொண்ட வள்ளுவர்.
எனவே வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்! வாருங்கள் நண்பர்களே!
ஆகஸ்ட் 5 நண்பர்கள் தினம்!
|