இருந்து வந்த மக்கள் அவர்களுடைய மொழியையே அங்கு பேசுகின்றனர்.
அங்கு குடிமக்கள் கணக்கெடுப்பின்போது, நீங்கள் வீட்டில் பேசும் மொழி என்ன என்று கேட்கப்படுகிறது. அதில் நீங்கள் ஆங்கிலம் என்று எழுதிவிட்டால் உங்களை தமிழர் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள். தமிழ் என்று எழுதினால் தான் தமிழர் என்று குறிப்பார்கள்.
இந்த கணக்கின் அடிப்படையில்தான் ஆஸ்ட்ரேயாவில் எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும். இது அங்கு வாழும் பல தமிழர்களுக்கு தெரியவில்லை.
இதனை அறிந்து கொண்ட நான் தமிழர்களிடம் வீட்டில் பேசும் மொழி தமிழ் என்று குறிப்பிடுங்கள் என்று கேட்டுக் கொள்ளும் ஒரு கைப்பிரதியை அச்சடித்து ஆஸ்ட்ரேலியாவில் இயங்கி வரும் தமிழர் அமைப்புகளுக்கு அனுப்பி வைத்து அதனை தமிழர்களிடம் சேர்க்குமாறு அறிவுறுத்தினேன்.
ஆஸ்ட்ரேலியாவில் எவ்வளவு தமிழர் அமைப்புகள் உள்ளன?
அது ஏராளமாக உள்ளது. ஆனாலும் அங்கு எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதனை குடிமை ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவலை வைத்து முதல் புத்தகத்தை நான்தான் வெளியிட்டேன்.
தமிழ் கம்யூனிட்டி இன் ஆஸ்ட்ரேலியா என்று அந்த புத்தகத்திற்குப் பெயர். இப்படிப்பட்ட முயற்சியை ஆஸ்ட்ரேலியாவில் வாழும் வேறு எந்த இனமும் மேற்கொள்ளவில்லை. இதையெல்லாம் எனது சொந்த செலவிலேயே செய்தேன்.
நீங்கள் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை?
43 புத்தகங்கள்.
இந்த புத்தகங்களில் எல்லாம் எதை மையப்படுத்தி எழுதியுள்ளீர்கள்?
இலங்கையில் இருந்தபோது நோக்கு வேறாகவும், ஆஸ்ட்ரேலியா வந்த பிறகு அந்த நோக்கம் மாறுபட்டதாகவும் இருக்கும்.
இலங்கையில் இருந்தபோது எதை மையப்படுத்தி எழுதினீர்கள்?
இலங்கையில் இருந்தபோது இலக்கியச் சார்பு இருந்தது. அல்லது சமுதாயத்தைப் பற்றியதாக இருந்தது. லண்டனில் இருந்தபோது எனது அனுபவத்தின் தொகுப்பாக எனது மகனுக்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு தந்தையின் பரிசு என்ற நூலை எழுதினேன். சென்னையில் படித்து முடித்தபோது மலரும் மணமும் என்ற புத்தகத்தை எழுதினேன். அது வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் பாட நூலாக உள்ளது.
நான் மு.வ-வின் மாணவன். பேராசிரியர் அன்பழகனும் எனது ஆசிரியர்.
தமிழறிஞர் மு. வரதராசனாரை காணாத என் போன்றவர்களுக்கு இது மிக இனிப்பான செய்தி.
நான் கிராமத்தில் பிறந்தவன், கிராமத்திலேயே வளர்ந்தவன். படிப்பெல்லாம் அங்குதான். இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று பள்ளி ஆசிரியராக இருந்த நிலையில், அதனைத் துறந்துவிட்டு மேற்கொண்டு தமிழ் படிக்க தமிழகம் வந்தேன். முன்பின் தெரியாத இடம். நேராக மு.வ-வின் வீட்டைத் தேடிச் சென்றேன்.
இது எந்த ஆண்டு?
1955ஆம் ஆண்டு. அவருடைய வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினேன். கதவைத் திறந்து என்னைப் பார்த்தவர், "யார்?" என்று கேட்டார். "நான் ஒரு ஆசிரியர். தமிழ் படிப்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளேன்" என்று கூறினேன். "ஏனய்யா தமிழைப் படித்தாய்?" என்று மு.வ. கூறினார். "விஞ்ஞானம் படித்தால் வளமாக வாழலாமே. தமிழைப் படித்து என்ன செய்யப் போகிறாய்?" "தமிழை படிப்பது ஆர்வமாக இருந்ததால்தான் வந்துவிட்டேன்" என்று கூறினேன். அதன்பிறகு அவர்தான் என்னை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
அவருடைய வீட்டில் தங்கித்தான் பி.ஏ. தமிழ் (ஹானர்ஸ்) படித்தேன்.
நான் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்புத் துவங்கியபோது முதல் ஆண்டில் ஆசிரியராக இருந்து எங்களுக்குக் கற்பித்தவர் பேராசிரியர் க. அன்பழகன். ஓராண்டுக்குப் பிறகுதான் அதாவது 1957ல் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முழு நேர அரசியலுக்குச் சென்றுவிட்டார்.
தமிழ்ப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். இலங்கைத் திரும்பி எனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தேன்.
பிறகு இலங்கையில் முதுகலை பட்டம் பெற்று விரிவுரையாளரானேன். அதன்பிறகுதான் லண்டன் சென்றேன்.
|