நிச்சய விடுதலை. ஆனால் இது நடைபெற முடியாது. இரண்டாவது தற்காலிக விடுதலை ஆனால் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது காலவரையரையற்ற ஒத்திபோடல், அதாவது விடுதலையுமற்ற தண்டனையுமற்ற ஒரு நிலை. அவனின் இந்த செய்தியைக் கேட்டு ஜோசப் மனமொடிந்து தேவையற்ற சில படங்களை அவனிடம் பெற்றுக்கொண்டு வெளியேறுகிறான்.
அவனது வக்கீலும் வழக்கு குறித்து அலட்சியமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட ஜோசப் கே, வக்கீலின் இன்னொரு கட்சிக்காரரையும் சந்திக்கின்றான். அவர் ஒரு வியாபாரி. அவருடைய வழக்கும் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படுவது தெரிய வருகிறது. ஜோசப்பின் சந்தேகத்தைக் கண்டு எரிச்சலடைகிறார் வக்கீல், ஆகவே கட்சிக்காரர்களிடம் தனது பிடியை நிருபிக்க வேண்டி ஜோசப் முன்னிலையில் அந்த வியபாரியை அழைத்து தனக்கு முன்னல் முட்டிக்கால் போடச்சொல்லி அவமானப்படுத்துகிறார் வக்கீல்.
ஜோசப் கே இன் கடைசி சந்திப்பு நகரத்தின் ஒரு சர்ச்சில் நடைபெறுகிறது. திடீரென திருக்கோயில் சமய உரை மேடைலிருந்து ஒரு குரல் கேயை பெயர்சொல்லி அழைத்து பேசத் துவங்குகிறது. சிறைப் புரோகிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பாதிரியார் இவனிடம் பேசத் துவங்குகிறார். அதாவது ஜோசப்பின் வழக்கு மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் நீதி மன்றத்தின் இயல்பையே இவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றும் மேலும் மற்றவர்களின் உதவியை குறிப்பாக பெண்களின் உதவியை அதிகமாக நாடுவதாயும் கூறுகிறார்.
இந்தச் சந்திப்பின் உச்சக்கட்டமாக பாதிரியார் ஒரு உருவகக் கதை ஒன்றை கூறுகிறார். இந்தக் கதையில் ஒரு மனிதன் சட்டத்த்தின் வாயிலில் நின்று கொண்டு உள்ளே போக முயற்சி செய்கிறான். ஆனால் வாயிற் காவலன் அவனை உள்ளே விட அனுமதி தற்போது கிடையாது என்று கூறிவிடுகிறான். பல வருடங்களாக அவன் அங்கு காத்துக்கிடக்கிறான், காவலனுக்கு லஞ்சம் கொடுக்கவும் முயற்சி செய்கிறான். அப்படியும் அவனுக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. கடைசியில் இறந்தும் போகிறான் அவன். இறக்கும் தருவாயில் அவன் காவலனிடம் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று கேட்கிறான். உடனே வாயிற்காவலன் யாருக்கும் அல்ல ஆனால் உனக்கு இப்போது நுழைய அனுமதி கிடைக்கிறது இந்தக் கதவு உனக்காக மட்டுமே நான் அதை இப்போது அடைக்கப்போகிறேன் என்கிறான்.
இந்தக் கதையை கேட்ட ஜோசப் உடனே அந்த மனிதன் ஏமாற்றப்பட்டான் என்று பாதிரியாரிடம் கூறினான். ஆனால் பாதிரியார் இந்த உருவகக் கதையைப்பற்றி வாதப்பூர்வமாகப் பேசி ஜோசப் இன்னமும் உண்மையான பிரச்சனை பற்றி புரிந்து கொள்ளவில்லை என்றும் இந்த உருவகக் கதையை இவனுடைய நிலமைக்கும் பொருத்திப் பார்க்க முடியாமல் ஜோசப் குழப்பமடைந்துள்ளான் என்றும் கூறுகிறார்.
நாவலின் இறுதிப்பகுதி முதல் பகுதிக்குப்பின் நடக்கும் நிகழ்வாக வருகிறது. அன்று ஜோசப் கே யின் 31ஆவது பிறந்த நாள் இரண்டு மனிதர்கள் அவன் விடுதியின் கதவைத்திறந்து கொண்டு நுழைகிறார்கள். தனக்கு தண்டனைக் கொடுக்க வந்தவர்கள் அவர்கள் என்று ஜோசப் சந்தேகம் கொள்கிறான் எதிர்த்துப்போறாடும் மனவுறுதி அப்போது அவனிடம் இருக்கவில்லை. கடைசி கணத்தில் அருகிலிருக்கும் வீட்டின் ஜன்னல் பறந்து திறந்து கொள்கிறது, வெளிச்சத்திற்கு எதிராக அதன் வடிவம் தெரிகிறது அதிலிலிருந்து ஒரு உருவம் கருணையின் காரணாமகவோ அல்லது இரக்கத்தின்பாலோ உதவி புரியும் பாவனையுடன் தன் இரு கைகளையும் நீட்டுவதைப் பார்க்கிறான் ஜோசப் கே. அது என்னெவென்று கே கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது ஒருவன் அவன் கழுத்தின் தொண்டை பகுதியை பிடித்துகொள்ள இன்னொருவன் ஜோசப்பின் மார்பில் கத்தியால் குத்துகிறான். ஜோசப் கே வாழ்வின் சுவடு தெருவில் அடிபட்டு இறக்கும் நாயைப் போல் சாகிறான்.
மரணமும் பயமும் வாழ்வின் அனைத்துக் கணங்களிலும் 'கே'-யை துரத்தி வந்த வண்ணம் இருக்கிறது. வாழ்க்கையே மரணத்தின் வலியாக மாறும்போது உண்மையான மரணம் வாழ்விலிருந்து அளிக்கப்படும் விடுதலையோ?
|