2007ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டன் நாவலாசிரியை டோரிஸ் லெஸ்ஸிங்கிற்கு கிடைத்துள்ளது.
88வது வயதில் நோபல் பரிசு பெறும் முதல் எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இது வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவரையும் சேர்த்து 11 பெண் எழுத்தாளர்களுக்கு கிடைத்துள்ளது.
1919-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெர்சியாவில் (இப்போது இரான்) பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆல்ஃப்ரட் டெய்லர், தாயார் எமிலி மௌட் டெய்லர். பெர்சியாவிலிருந்து குழந்தை பிராயத்திலேயே இவரது குடும்பம் அப்போதைய பிரிட்டிஷ் காலனியான ருடீஷியாவிற்கு புலம் பெயர்ந்தது, ருடீஷியா தற்போது ஜிம்பாப்வே.
செல்வச் செழிப்பான ஒரு சூழலில்தான் லெஸ்ஸிங் வளர்ந்தார். இவரது தந்தை ருடீஷியாவில் 1000 ஏக்கர்கள் நிலம் வாங்கி விவசாயம் செய்தார். ஆனால் வேளாண்மையில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிட்டவில்லை.
தற்போது ஹராரே என்று அழைக்கப்படும் ஜிம்பாப்வே தலைநகர் அப்போது சாலிஸ்பரி என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள டொமினிகன் பெண்கள் உயர் நிலை பள்ளியில் கல்வி பயின்றார் டோரிஸ் லெஸ்ஸிங். 14 வயதில் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு, வீட்டில் தானாகவே படித்தார். 15 வயதில் செவிலியர் பணியில் சேர்ந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் அவர் அரசியல், சமூகவியல் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். 1937ஆம் ஆண்டு வாக்கில் எழுத தொடங்கினார். பிறகு தற்போதைய ஹராரேயில் தொலைபேசி ஆபரேட்டராக பணியாற்றினார். அப்போதுதான் இவருக்கு பிராங்க் விஸ்டம் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் 2 குழந்தைகள் பிறந்தன. 1943ல் இருவரும் பிரிந்தனர்.
அதன் பிறகு இடதுசாரி புத்தக் கிளப் ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்டது. இங்குதான் தனது 2வது கணவர் காட்ஃப்ரைட் லெஸ்ஸிங் என்பவரை சந்தித்தார். இரண்டாவது திருமணம் நடந்து, மீண்டும் ஒரு குழந்தை பிறகு 1949ல் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
|