சமீபத்தில் என் சகோதரன், வேலைக் காரணமாக மும்பையிலிருந்து வந்தான். அவன் வந்த பிறகு, என் மனைவியின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டது. என்னோடு வெளியே வர தயங்குபவள், என் சகோதரனுடன் வெளியே செல்ல காரணங்களைத் தேடுகிறாள். என் சகோதரனை பிடித்திருப்பதாக கூறினாலும் எனக்கு துரோகம் செய்யவில்லை என்கிறாள். இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது?
திருமணத்திற்குப்பின், ஒரு கணவனோ, மனைவியோ தனக்கு உரிய உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. அதுபோல் தனது விருப்பு வெறுப்புகளை தெளிவாக தன்னை மணந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
உங்கள் மனைவியை வெளியில் அழைத்துச் செல்வது உங்கள் உரிமை. அதை உங்கள் சகோதரனுக்கு அளிக்காதீர்கள். உங்கள் மனைவியிடம், அவள் உங்கள் சகோதரனுடன் வெளியிடங்களுக்குச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். அவள் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை. எனினும் அவளது எல்லைகளை மீறுகிறாள். அதாவது கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள எழுதப்படாத சட்டங்களை அவமதிக்கிறாள். அவளுக்கு சந்தோஷம் கொடுக்கும் ஒரு செயல் உங்களுக்கு சஞ்சலத்தைக் கொடுத்தால் அவள் அச்செயலில் தொடர்ந்து ஈடுபடக்கூடாது. அப்பொழுதுதான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். இக்காரியத்தை மற்றொரு கோணத்திலும் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மனைவி உங்களுடன் வெளியே வருவதை ஏன் விரும்பவில்லை என்று.
நீங்கள் மிகவும் கஞ்சத்தனம் உள்ளவரா? வெளியே சென்றால் செலவாகுமே? அதை நீங்கள் விரும்பாமல் எரிச்சல் அடைவீர்களா? வெளியிடங்களில் உங்கள் மனைவியை சந்தேகக் கண்களோடு ஆராய்வீர்களா? சகஜமாகப் பழகாமல் உம் என்று இருப்பீர்களா? மற்றவருக்கு முன் மனைவியை மட்டம் தட்டுவீர்களா? உங்க ள்மனைவியிடம் அவர் உங்களுடன் வெளியே வர ஏன் மறுக்கிறார் என்பதைக் கேட்டு அறிந்த கொள்ளுங்கள். சிறு குறைகள் இருந்தால் அவற்றை களைந்து விடுங்கள்.
உங்கள் சகோதரரை தனியாகத் தங்கச் சொல்லுங்கள். அவரால் குடும்பத்தில் குழப்பங்கள் வரும் போது அவர் உங்களுடன் வாழ்வது நல்லதல்ல. மனஉறுதியுடனும் தெளிவுடனும் செயல்படுங்கள்.
|