வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (19:50 IST)

மெக்ஸிகோ எல்லைக்கு தேசிய பாதுகாப்பு படை: அமெரிக்கா சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுகொண்டதை தொடர்ந்து மெக்ஸிகோ எல்லையில் தேசிய பாதுகாப்பு படையினரை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் தெரிவித்திருக்கிறது.
அடுத்த 72 மணிநேரத்திற்குள் 250 பேரை அந்தப் பகுதியில் ரோந்து பணிக்கு அனுப்பவிருப்பதாக தேசிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் 150 படையினரை இப்பணியில் ஈடுபடுத்த அரிசோனா மாகாணமும் திட்டமிட்டு வருகிறது.
 
தான் முன்மொழிந்த எல்லைச் சுவரை கட்டி முடிக்கும் வரை மெக்ஸிகோ எல்லையில் 4 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினரை ரோந்து பணிக்கு அனுப்ப விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
 
டெக்ஸாஸ் மற்றும் அரிசோனா எடுத்திருக்கும் நடவடிக்கை போல நியூ மெக்ஸிகோவும், கலிஃபோர்னியாவும் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.
 
அதிபர் டிரம்பின் உறுதியான குடியேற்ற எதிர்ப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக "பிடிப்பதும், பின்னர் விடுதலை செய்வதும்" என்ற வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தையும் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
 
சட்டபூர்வமற்ற குடியேறிகளை பிடித்து விடுதலை செய்வதைவிட, அவர்களை நாடு கடத்தும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விரும்புகிறார்.
இதனை நிறைவேற்றக்கூடிய ராணுவ மற்றும் பிற வசதிகளின் விவரங்களை அமெரிக்க பாதுகாப்பு துறையிடம் டிரம்ப் கேட்டுள்ளார்.
 
மேலும் சட்டவிரோதக் குடியேறிகளை மெக்சிகோ தடுக்காவிட்டால் வட அமெரிக்க தாராள வணிக ஒப்பந்தத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்று டிரம்ப் மெக்சிகோவை எச்சரித்தார்.