1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2017 (16:44 IST)

டைட்டானிக் விபத்திற்கு பனிப்பாறை காரணம் இல்லையாம்! - புதிய காரணம் கண்டுபிடிப்பு

மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட ’டைட்டானிக்’ என்ற பயணிகள் கப்பல் கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கியது.


 

செர்பர்க், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் உள்ள குவினல் டவுன் (கோப்க்) வழியாக நியூயார்க்கை சென்றடைய போக்குவரத்து வழி வகுக்கப்பட்டிருந்தது.

அந்த கப்பலில் 28 நாடுகளை சேர்ந்த 1296 பயணிகள் இருந்தனர். அவர்களில் 416 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள், 112 பேர் குழந்தைகள், 13 தேனிலவு தம்பதிகள் இருந்தனர்.

இவர்கள் தவிர 918 கப்பல் ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 7 கண்காணிப்பு அதிகாரிகள், 23 பெண் என்ஜினீயர்கள், 28 ஆண் என்ஜினீயர்கள், 289 பாய்லர் மற்றும் என்ஜின்மேன்கள், 491 சர்வீஸ் ஊழியர்கள், 7 தச்சு தொழிலாளர்கள் அடங்குவர்.

சவுதாம்ப்டனில் இருந்து முதல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. 4 நாள் கழித்து அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு 11.40 மணியளவில் டைட்டானிக் கப்பல் பனிப்பாறை மீது மோதியது.

இதனால் ஓட்டை விழுந்து கடல்நீர் கப்பலுக்குள் புகுந்தது. இதனால் கப்பல் மூழ்கத் தொடங்கியது. உடனே பயணிகள் உயிர்க்காக்க பயன்படுத்தும் சிறிய படகுகள் மூலம் கடலில் இறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இருந்தும் 711 பேரை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடிந்தது.

ஏப்ரல் 15ஆம் தேதி அதிகாலை 2.20 மணிக்கு டைட்டானிக் கப்பல் முழுவதும் மூழ்கியது. மேலும் கப்பலில் இருந்த 1514 பேர் பலியாகினர்.

விபத்துக்கு அந்த கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக செலுத்தியதே காரணம் என்ற தகவலும் வெளியானது. கேப்டன் பீதியடைந்து பதற்றத்திலும், அவசரத்திலும் தவறான பாதையில் கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணமாக கூறப்பட்டது.

மேலும், கப்பலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டன் சார்லஸ் லைட்டோலரின் பேத்தி லூயிஸ் பேட்டன் தனது  'குட் காட்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்து ஏறக்குறைய 100 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ’கப்பலின் பாய்லர் ரூமில் ஏற்பட்ட தீயே டைட்டானிக் மூழ்குவதற்குக் காரணம்’ என இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் புறப்படுவதற்கு முன்பே இந்தத் தீயினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.