1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 செப்டம்பர் 2018 (08:00 IST)

தண்ணீரில் தரையிறங்கிய விமானம்...பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்...

இந்தோனேஷியாவுக்கு அருகேவுள்ள மைக்ரோனீஷியா நாட்டில் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை தாண்டி சென்ற விமானம் ஒன்று அருகேயுள்ள கடற்காயல் நீர்ப்பரப்பில் தரை இறங்கியுள்ளது.
ப்புவா நியூகினியாவை சேர்ந்த ஏர் நியூகினி என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் காயல் பரப்பில் தரையிறங்கியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்த விமானத்திலிருந்த 35 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என அனைவரும் எவ்வித காயமும் இல்லாமல் உயிர் தப்பினர். இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் சரியாக தெரியவில்லை.  இவ்விபத்து குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."விமான நிலைய ஓடுபாதையிலிருந்து சுமார் 480 அடிகள் தொலைவிலுள்ள நீர்ப்பரப்பில் விமானம் புகுந்தது" என்று சுக் சர்வதேச விமான நிலையத்தின் மேலாளர் ஜிம்மி எமிலியோ கூறினார்.
 
"என்ன நடந்தது என்பது குறித்து தற்போதைக்கு தெரியவில்லை. இன்னும் சில நாட்களில் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த விசாரணைகள் தொடங்கும். இந்நிலையில், விமான நிலையத்தின் செயல்பாடு மீண்டும் சீரடைந்துள்ளது" என்று அவர்  கூறினார்.
 
மேலும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டவுடன், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், சில பயணிகளுக்கு "சிறியளவிலான காயங்கள்" ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு  என்று தான் நினைப்பதாகவும் எமிலியோ கூறினார்.
 
மைக்ரோனீஷியாவின் ஃபோன்பெய் என்ற பகுதிலிருந்து பப்புவா நியூகினியாவின் தலைநகரான போர்ட் மொரேஸ்பேவை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தை இடையில் மைக்ரோனீஷியாவிலுள்ள வெனோ தீவில் தரையிறக்கும்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.