ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:48 IST)

வெப்பமயமாகும் கடல்கள்: விளைவுகளும், காரணங்களும்......

பூமி வெப்பமடைதல் விளைவுகளால் உலகின் கடல்கள் வெப்பமயமாகி மனிதர்கள், விலங்குகளிடத்தில் நோய்களைப் பரப்புவதோடு புவி நெடுகிலும் உணவுப்பாதுகாப்பு அச்சுறுத்தளை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
12 நாடுகளைச் சேர்ந்த 80 ஆய்வு விஞ்ஞானிகள் ஹவாயில் நடைபெற்ற சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் உலக பாதுகாப்பு மாநாட்டில் இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகளை தெரிவித்தனர். 
 
கடல்கள் தான் இந்த உலகை காப்பற்றி வருகிறது. ஒவ்வொரு விநாடியும் நாம் சுவாசிக்கும் பிராணவாயுவை கடல்களே வழங்குகின்றன. இதுவரையில்லாத அளவில் புவிவெப்பமடைதலால் கடல் அளவுக்கு மீறி வெப்பமயமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
1970களுக்குப் பிறகு பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் உலக உஷ்ணத்தில் 93%-ஐ கடல் உறிஞ்சுகிறது. இதனால் நிலத்தில் உணரப்படும் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்தாலும் கடலுக்குள் இருக்கும் உயிர்களின் வாழ்க்கையை பெரிய அளவில் மாற்றியுள்ளது. 
 
கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பு:
 
ஆழ்கடல் முதல் மேற்பரப்பு வரை, நுண்ணுயிரிகள் முதல் திமிங்கிலங்கள் வரை கடல் வெப்ப அதிகரிப்பு பாதிப்பை உண்டாக்குகின்றன.  
 
ஜெல்லிஃபிஷ், கடல் பறவைகள், நுண்ணுயிர் மிதவைகள் ஆகியவை கடலில் குளிரான இடங்களை நோக்கி புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. 
 
கடல் சூழலியல் அமைவில் கடல்வாழ் உயிரிகளின் இடப்பெயர்வு நிலத்தை ஒப்பிடும் போது 1.5 முதல் 5 மடங்கு வரை வேகமாக நடைபெறுகிறது. 
 
கடல் ஆமைகளின் பாலின விகிதமும் மாறுபடுகிறது. வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் பெண் பாலின கடல் ஆமைகளே அதிகம் பிறக்கும் நிலை தோன்றியுள்ளது. 
 
கடல் உஷ்ணத்தினால் நுண்ணுயிரிகள் கடலின் மிகப்பரவலான பகுதிகளை ஆதிக்கம் செலுத்துகிறது. 
 
குறிப்பாக கடல் உஷ்ணமடைவதால் தாவரங்கள், விலங்குகளில் அதிக நோய்கள் உருவாவதும் கண்டுபிடிக்கப்பட்டது. காலரா நோய்க்கூறுகளை சுமக்கும் பாக்டீரியாக்கள், நச்சு பாசிகள் ஆகியவை மனிதர்களில் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தி வருகின்றன. 
 
உணவு பாதுகாப்பு:
 
உஷ்ணக்கடல்கள் பவளப்பாறைகளை பெரிய அளவில் அழித்து வருகின்றன. மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இதனால் உணவுக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது. 
 
தென் கிழக்கு ஆசியாவில், 1970-2000-ம் ஆண்டு காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 2050-ம் ஆண்டுவாக்கில் மீன்களின் எண்ணிக்கை 10% முதல் 30% வரை குறைந்து விடும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
மூலக்காரணம்:
 
பசுமை இல்ல வாயுக்கள் என்ற கிரீன் ஹவுஸ் கேஸ்களை வெளியேற்றுவதே முக்கிய காரணம்.இதனை கட்டுப்படுத்தியேயாக வேண்டிய நிலையில் உள்ளோம்.