செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (16:29 IST)

ஃப்ரீசரில் கணவன்: பத்து ஆண்டுகளாக பாதுகாத்த மனைவி! – அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவில் இறந்து போன தனது கணவரை 10 ஆண்டுகளாக ஃப்ரீசரில் மூதாட்டி ஒருவர் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் வசித்து வருபவர் ஜீன் சவுரோன். 75 வயதான ஜீன் சவுரோனின் கணவர் பால் எட்வர்ட்ஸ் இராணுவத்தில் பணிபுரிந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால் எட்வர்ட்ஸ் இறந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் ஜீன் சவுரோன்.

இந்நிலையில் கடந்த மாதம் ஜீன் சவுரோன் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவர் வயது மூப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் , அவரது வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த ஃப்ரீசரை திறந்தவர்களுக்கு அதிர்ச்சி.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன பால் எட்வர்ட்ஸின் சடலம் அதில் இருந்துள்ளது. தனது இறந்த கணவரை ஜீன் புதைக்காமல் ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்து வந்தது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சடலத்தோடு இருந்த ஒரு கடிதத்தில் ’என் சாவுக்கு காரணம் என் மனைவியல்ல” என்று பால் எட்வர்ட்ஸ் எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பால் எட்வர்ட்ஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், தற்கொலை செய்து கொள்ளும் முன் இந்த கடிதத்தை எழுதியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இறந்த கணவரை பத்து ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.