ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (13:15 IST)

அப்போலோவில் ஜெ.வை யாரெல்லாம் பார்த்தனர் - சசிகலா வாக்குமூலம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை யாரெல்லாம் பார்த்தனர் என சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களிலும் அவரை சசிகலாவை தவிர யாரும் சந்திக்கவில்லை என புகார் எழுந்தது.  
 
அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் யாரையும் ஜெ.வை பார்க்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. எனவே அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. அமைச்சர்கள் பலரும் நாங்கள் அவரை சந்திக்கவே இல்லை. சசிகலா தரப்பில் என்ன கூறப்பட்டதோ அதைத்தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம் எனக் கூற விஷயம் பூதாகரமானது.  
 
ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கின. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஜெ.வின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
 
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலா, விசாரணை ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை பிரம்மாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அமைச்சர் ஓ.பி.எஸ், தம்பிதுரை, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் அவரை பார்த்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.