ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (13:10 IST)

செப்.22ம் தேதி என்ன நடந்தது? - சசிகலா பரபரப்பு வாக்குமூலம்

2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு போயஸ்கார்டன் வீட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என சசிகலா விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களிலும் அவரை சசிகலாவை தவிர யாரும் சந்திக்கவில்லை என புகார் எழுந்தது. 
 
அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் யாரையும் ஜெ.வை பார்க்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. எனவே அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. அமைச்சர்கள் பலரும் நாங்கள் அவரை சந்திக்கவே இல்லை. சசிகலா தரப்பில் என்ன கூறப்பட்டதோ அதைத்தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம் எனக் கூற விஷயம் பூதாகரமானது. 
 
ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கின. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஜெ.வின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

 

 
அதையடுத்து, ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலாவின் உறவினர்கள் விவேக், கிருஷ்ணபிரியா, ஜெ.வின் உதவியாளர்கள், போயஸ் கார்டனில் பணிபுரிந்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல், சசிகலாவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தன் மீது புகார் கூறியவர்கள் கொடுத்த ஆதாரங்கள் வேண்டும், மௌன விரதம் இருப்பதால் பதில் கூற  முடியாது என பல்வேறு காரணங்கள் கூறி சசிகலா தட்டிக்கழித்து வந்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுப்போம் அல்லது சிறையில் சென்று விசாரணை நடத்துவோம் என நீதிபதி ஆறுமுகசாமி கோபம் காட்ட தற்போது இறங்கி வந்துள்ளார் சசிகலா.
 
அவரின் வாக்குமூலத்தை விசாரணை ஆணையத்தில் பிரமாணப்பத்திரமாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் செப்.22ம் தேதி என்ன நடந்தது என்பதை அவர் விவரித்துள்ளார்.

 
2016ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நீரிழிவு மற்றும் தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டார். எனவே, அவருக்கு குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். செப்.16ம் தேதி வரை அவர் மாத்திரை சாப்பிட்டார். அந்நிலையில், செப்.19ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. செப்.21ம் தேதி அவருக்கு காய்ச்சல் அதிகமானது. எனவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்தோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. 
 
செப்.22ம் தேதி இரவு மிகவும் சோர்காக இருந்தார். இரவு 9.30 மணியளவில் அவர் மயங்கி கீழே விழுந்தார். எனவே, அவரின் பாதுகாவலர்கள் 2 பேரையும், கார் ஓட்டுனரையும் அழைத்தேன். மேலும், மருத்துவர் சிவகுமாருக்கு போன் செய்து வரவழைத்தேன். அவர் ஜெ.விற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அதன்பின், அப்போலோ மருத்துவர் விஜயகுமார் ரெட்டிக்கு போன் செய்து இரண்டு ஆம்புலன்சுகளை வரவழைத்தேன். அப்போது ஜெ. மயங்கிய நிலையில் இருந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றினோம். அப்போது அவருக்கு நினைவு திரும்பியது. அதன் பின் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம் என அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.