வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (17:28 IST)

நீங்க என்ன அவ்வளவு பிஸியா? - பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னையில் ஜனவரி 18-ந்தேதி நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்தார். ஆண்டாள்  விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால், தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அவர் பேசினார்.

இதுகுறித்து நாராயணன் என்பவர் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாரதிராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே 23-ந்தேதி நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியதொட்டு, மூன்று வாரங்களுக்கு  வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்து உத்தரவாதம் அளித்து ஜாமீன்  பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
 
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால  அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று புதிய மனுவை ஐகோர்ட்டில் பாரதிராஜா தாக்கல் செய்தார்.
 
அந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா பற்றி  செய்திகள் வருகிறது, அதற்கெல்லாம் செல்ல முடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லையா? நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது,  நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீதிபதி விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு  தள்ளி வைத்தார்.