வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (14:12 IST)

விக்ரம் பிரபுக்கும், துல்கர் சல்மானுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?

விக்ரம் பிரபுவும், துல்கர் சல்மானும் பல வருட நண்பர்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.


 
 
தொழில் ரீதியாகப் பழகி, பின்னாட்களில் நெருக்கமான பலர் சினிமாவில் உண்டு. விஷால் – ஆர்யா, வெங்கட்பிரபு அண்ட் டீம் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விக்ரம் பிரபுவும், துல்கர் சல்மானும் நண்பர்கள் என்ற தகவல் ஆச்சரியம் அளிக்கிறது.
 
ஆக்டிங் ஸ்கூலில் துல்கர் சேர்ந்தபோது, அங்கு விக்ரம் பிரபுவும் சேர்ந்திருக்கிறார். மொத்தம் 24 மாணவர்களை உள்ளடக்கிய அந்த வகுப்பறையில், ஒரு பையன் சென்னையில் இருந்து வந்திருப்பதாகச் சொல்ல, அவரைப் பார்க்கும் ஆர்வம் துல்கருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் பெயர் விக்ரம் பிரபு என்று தெரிந்து கொண்டதும், ‘நடிகர் பிரபுவின் மகனாக இருப்பாரோ..?’ என்று யோசித்த துல்கர், தன் அப்பாவிடம் பேசி அதை உறுதி செய்திருக்கிறார்.
 
எனவே, விக்ரம் பிரபு யார் என்பது துல்கருக்குத் தெரிந்துவிட்டது. ஆனாலும், அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இருவருமே தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, மிக ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார்கள். ‘தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதாக’ விக்ரம் பிரபு சொல்ல, ‘தன் அப்பா லாயர்’ எனப் பொய் சொல்லியிருக்கிறார் துல்கர்.
 
இந்த விஷயம் பல நாட்களாகத் தொடர, ‘உன் அப்பா இப்போது என் வீட்டில் அப்பாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்’ என ஒருநாள் துல்கர் சொல்லியிருக்கிறார். தன் அப்பா கேரளாவுக்குப் போனது விக்ரம் பிரபுவுக்குத் தெரியும் என்றாலும், துல்கரின் அப்பா யார் என்பதை விக்ரம் பிரபுவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
‘சஸ்பென்ஸ் போதும்…’ என விக்ரம் பிரபு கெஞ்ச, தான் மம்மூட்டியின் மகன் என உண்மையை உடைத்திருக்கிறார் துல்கர் சல்மான். அவ்வளவுதான்… துல்கரைக் கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பைத் தெரிவித்திருக்கிறார் விக்ரம்பிரபு. இப்போது இரு குடும்பமும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். வாய்ப்பு வரும் சமயத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.