1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (10:39 IST)

சுயமரியாதையை இழந்து வாட்டாள் நாகராஜிடம் மன்னிப்பு கேட்ட சத்யராஜ்: எச். ராஜா விளாசல்!

சுயமரியாதையை இழந்து வாட்டாள் நாகராஜிடம் மன்னிப்பு கேட்ட சத்யராஜ்: எச். ராஜா விளாசல்!

பாகுபலி திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என்பதற்காக நடிகர் சத்யராஜ் நேற்று கர்நாடக மக்களிடம் தான் 9 வருடத்திற்கு முன்னர் பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்கள் பல வந்துகொண்டு இருக்கின்றன.


 
 
சத்யராஜ் தனது விளக்கத்தில் தனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், மேலும் தான் தமிழர் நலன் சார்ந்து விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.
 
இதனை பலரும் வரவேற்றாலும், சிலர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்திருக்கவே கூடாது, அவர் பணம் சம்பாதிக்க தான் இப்படி செய்தார் என குறைகூறி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவும் சத்யராஜை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
இது தொடர்பாக அவர் டுவிட்டரில், கமல், சத்யராஜ் போன்ற நடிகர்கள் பணத்தை பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறார்கள். தமிழ் மற்றும் தமிழ் உணர்வுகள் என அவர்கள் பேசுவது வெறும் மேலோட்டமானது தான் என குறிப்பிட்டுள்ளார்.

 
மேலும் பாகுபலி திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடாவிட்டால் வானம் இடிந்து கீழே விழுந்துவிடாது. ஆனால் சத்யராஜ் தனது சுயமரியாதையை இழந்து வாட்டாள் நாகராஜிடம் மன்னிப்பு கேட்டது பணத்திற்காக மட்டுமே எனவும் விமர்சித்துள்ளார் எச். ராஜா.