1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (01:01 IST)

இயக்குனர் பா.ரஞ்சித்துடன் மோதலா? அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்த கோபிநயினார்

இயக்குனர் கோபிநயினாரின் 'அறம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. பல வருட போராட்டத்திற்கு பின்னர் இயக்குனர் கோபி தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றுவிட்டார். கோபிநயினாரின் கதையை சுட்டு 'கத்தி' படமெடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் குறித்துதான் பலருக்கு தெரிந்திருக்கும், ஆனால் இவருடைய கதையை திருடித்தான் பா.ரஞ்சித் 'மெட்ராஸ்' படம் எடுத்ததாக ஒரு வதந்தி கோலிவுட்டில் சில வருடங்களாக உலாவி வருகிறது.


 


இந்த நிலையில் 'அறம்' படத்தை பாராட்டி டுவீட் போட்ட இயக்குனர் ரஞ்சித், தோழர் நயன்தாரா என்று கூறி பாராட்டினார். ஆனால் இயக்குனர் கோபி குறித்து அவர் தனது டுவீட்டில் குறிப்பிடவில்லை. இந்த விவகாரம் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இயக்குனர் கோபிநயினார் ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயக்குநர் ரஞ்சித்தும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். ஆனால் சில நலன்விரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான சூழலல்ல.

தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன். நானும், இயக்குநர் ரஞ்சித்தும் இந்தச் சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கின்றன. குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்துச் செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போதுதான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக் கூடும்.

ஆதலால், உறவுகளைச் சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தத்தை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு இயக்குனர் கோபிநயினார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.