வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (09:33 IST)

தோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு

போட்டியில் வெல்வதற்கு தோனியும் ரோஹித்தும் கொடுத்த அட்வைஸ் வெற்றிப் பெறுவதற்கு உதவி புரிந்தது என இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடந்து முடிந்த 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. வெற்றிக்கு இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் சதமும் விஜய் ஷங்கரின் கடைசி ஓவர் பவுலிங்கும் முக்கியக் காரணமாக அமைந்தன.

ஆட்டநாயகன் விருது பெற்ற கோஹ்லி வெற்றிக்கு ரோஹித்தும் தோனியும் கொடுத்த ஒரு முக்கியமான யோசனைப் பெரிதும் உதவியது எனக் கூறியுள்ளார். அதில் ‘நான் பேட் செய்ய இறங்கியபோது சூழ்நிலை கடினமாக மாறியது. கடைசி வரை ஆடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இன்று விஜய் சங்கர் பிரமாதமாக ஆடினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆகும் சூழல் உருவானது. இக்கட்டான சூழ்நிலையில் விஜய் சங்கரை உண்மையில் 46 ஆவது ஓவரில் கொண்டு வரலாம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் ரோஹித் சர்மா, தோனி ஆகியோரிடம் ஆலோசித்த போது இருவரும் பும்ரா, ஷமியே வீசட்டும் நமக்கு இன்னும் ஓரிரு விக்கெட்டுகள் விழுந்தால் நாம் டாப்பில் இருப்போம்  என்றனர் அதுதான் மிகச்சரியாக நடந்தது. விஜய் சங்கர் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசி எளிதாக வைத்துக் கொண்டார். அதுதான் வேலை செய்தது. இது போன்ற போட்டிகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன.  ரோஹித்துடன் பேசுவதும் கைகொடுக்கிறது, தோனி நீண்டகாலமாக இந்தப் பணியைச் செய்து வருகிறார்.’ எனப் புகழாரம் செய்துள்ளார்.

விஜய் ஷங்கரின் இந்த அசத்தலான ஆட்டத்தால் விஜய் ஷங்கருக்கு உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.