1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (13:59 IST)

ஜய வருட ராசி பலன்கள் - கன்னி

ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் நீங்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். நட்பு வட்டம் விரிவடையும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள் உங்களை புரிந்துகொண்டு வலிய வந்து உதவுவார்கள். 
 
பூர்வீகச் சொத்தை உங்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள்.  
உங்கள் ராசியிலேயே இந்த ஜய வருடம் பிறப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அவ்வப்போது கோபப்படுவீர்கள். அடிக்கடி தலைவலி, வாயுப் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல், தோலில் நமைச்சல், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
 
வருடம் பிறக்கும்போது செவ்வாய் வக்ரமாகி உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதுடன், சுக்கிரனும் 6ம் வீட்டில் பலவீனமாகி நிற்பதால் மன இறுக்கம் அதிகமாகும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். சொத்துப் பிரச்னையை சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். எதிர்தரப்பு வாய்தாவால் வழக்குகள் தள்ளிப்போகும். 
 
ஆனி, ஆடி, மார்கழி, மாசி மாதங்களில் திடீர் திருப்பங்களும், யோகங்களும் உண்டாகும். ஜூன் 12 வரை குரு 10ல் தொடர்வதால் வேலைச்
சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, இரவல் வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். உங்களை யாரும் மதிக்கவில்லை, யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்கிற பயமும் வரும். 
 

ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் லாப வீட்டில் சென்று அமர்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். மனைவி வழியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய நகையை மாற்றி புது 
டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கல்யாணம் கூடி வரும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். 
 
மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். குறைகூறிக் கொண்டிருந்த உறவினர்களின் மனமும் மாறும். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள். வேலையும் கிடைக்கும். சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. 
 
ஜூன் 20ந் தேதி வரை கேது உங்களின் ராசிக்கு 8ம் வீட்டிலும், ராகு 2ம் வீட்டிலும் நிற்பதால்  உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. கண் வலி, வீண் வாக்குவாதம், சிறுசிறு விபத்துகள், மனதில் ஒருவித சஞ்சலம் வந்துபோகும். திடீர் பயணங்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஜூன் 21ந் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்குள்ளேயும், கேது 7ம் வீட்டிலேயும் நுழைவதால் விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். அலைச்சல் குறையும். என்றாலும் வீண் டென்ஷன், எதிலும் ஒரு பிடிப்பற்றப் போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, தலைச்சுற்றல், ஹார்மோன் பிரச்னை வந்துபோகும். 
 
இரும்பு, சுண்ணாம்புச் சத்துள்ள காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனைவிக்கு அடிவயிற்றில் வலி, ஃபைப்ராய்டு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். 
 
டிசம்பர் 15 வரை சனி உங்கள் ராசிக்கு 2ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனி தொடர்வதால் சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். பார்வைக் கோளாறு வந்து நீங்கும். 
 

பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கு, பிடிவாத குணத்தை நினைத்து வருந்துவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மகள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வாள். மகன் கோபப்படுவார். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. 
 
டிசம்பர் 16 முதல் ஏழரைச் சனி விலகி 3ம் வீட்டில் சனிபகவான் நுழைவதால் நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து செயல்படத் தொடங்குவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். என்றாலும் பெரியளவில் முதலீடுகள் வேண்டாம். கடன் வாங்கி கடையை விரிவுபடுத்தி நவீனமாக்குவீர்கள். உணவு, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. தொழில் ரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். 
 
உத்தியோகத்தில் ஜூன் 12 வரை குரு 10ல் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகளும், வேலைச்சுமையும் இருக்கும். 13ந் தேதி முதல் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்பை உயரதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். உங்களை எதிர்த்த அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். 
சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பதவி உயர்விற்காக சில தேர்வுகளை எழுதத் 
திட்டமிடுவீர்கள். 
 
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். புது வாய்ப்புகளும் வரும்.
 
மாணவ-மாணவியர்களே! பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.  
 
கன்னிப்பெண்களே! தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில் 
அமர்வீர்கள். வயிற்றுக் கோளாறு, தூக்கமின்மை வந்து நீங்கும். 
 
இந்த ஜய வருடம் முற்பகுதி கொஞ்சம் சறுக்கினாலும் பிற்பகுதியில் உயர்ந்த இடத்தில் அமர்த்துவதாக இருக்கும். 
 
பரிகாரம் :  தாம்பரம் - செங்கல்பட்டு சாலையிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி பெருமாளை தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.