வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (15:00 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - மகரம்

அழுத்தமான கொள்கை கோட்பாடுகளை கொண்டவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கௌரவத்தையும், செல்வாக்கையும், ஓரளவு பணவரவையும், குடும்பத்தில் சந்தோஷத்தையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மற்றவர்களை சார்ந்து இருக்காமல் உங்கள் சொந்த முயற்சியில் என்ன முடியுமோ அதை மட்டும் செய்து முன்னேறப்பாருங்கள். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.

திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையப்பமிட வேண்டாம். வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பிறகு காசோலை தருவது நல்லது. கணவன்-மனைவிக்குள் மோதல்கள் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். டிரைவிங் லைசன்ஸ், இன்சுரன்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா. அவற்றையெல்லாம் புதுப்பித்துவிட்டீர்களா என பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவ்வப்போது அபராத தொகை செலுத்த வேண்டி வரும்.

நெருக்கமாக பழகிய ஒருசிலர் கொஞ்சம் ஒதுங்கி செல்வார்கள். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இரு5ப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேப் போல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கருவேப்பில்லையாய் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். தங்க நகைகள் களவுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்த்துவிடுங்கள். தகுதியில் குறைந்தவர்கள், வயதில் குறைந்தவர்களையெல்லாம் அனுசரித்துப் போக வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். என்றாலும் வீண் சந்தேகத்தால் அவ்வப்போது விவாதங்கள் வரும். மனைவிக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பாதீர்கள். 
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களது 2-ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பழைய காலி இடத்தை விற்று புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். 
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களது சுக ஸ்தானமான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடனான மோதல்கள் விலகும். அவருக்கு இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். 
 
குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெகுநாட்களாக இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த பின்னடைவு விலகும். உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். அடிக்கடி தொந்தரவு தந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வண்டியில் வலம் வருவீர்கள். திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பூர்வீக சொத்து சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.  
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தில் சீர்த்திருத்தம் செய்வீர்கள்.
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் சிறுசிறு விபத்துகள், வீண் அலைச்சல், முன்கோபம், காரியத் தடைகள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். 

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். குடும்பத்தில் இணக்குகள் வரும்.
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால்பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள்.    
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவ்வப்போது அவர்களின் குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள்.
 
வியாபாரிகளே! போராடி லாபம் ஈட்டுவீர்கள். சிலர் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். பழைய வாடிக்கையாளர்கள் மனங்கோணாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களை உற்று கவனியுங்கள். மற்றவர்கள் பேச்சை கேட்டு அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப்பாருங்கள். பங்குதாரர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. சிலர் தங்கள் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். 
 
உத்யோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகமாகும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பணிகளை சற்று போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். உயர்மட்ட அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எவ்வளவு உழைத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறத்தான் செய்வார்கள். கவலைபடாதீர்கள், கடமையை செய்யுங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. சிலர் உங்கள் மீது தவறான வழக்குகள் போட வாய்ப்பிருக்கிறது. 
 
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். காதல் கசந்து இனிக்கும். முகப்பரு, கனவுத் தொல்லை வந்துப் போகும். கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள். 
 
மாணவ-மாணவிகளே! நீங்கள் மிகவும் திறமையானவர்கள்தான். ஆனால் தேர்வு நெருங்கும் நேரத்தில் மட்டும் படிக்காமல் அன்றன்றைய பாடங்களை உடனுக்குடன் முடியுங்கள். அலட்சியப்போக்கு, வீணாக வகுப்பறையில் அரட்டை அடிப்பது என நேரத்தை வீணடிக்காதீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 
 
கலைத்துறையினரே! பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மனந்தளராமல் இருங்கள். 
 
பரிகாரம்:
திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மணமுறிவுப் பெற்றவர்களுக்கு உதவுங்கள்.