வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (13:01 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

இரக்க குணம் அதிகமுள்ளவர்களே! இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு தைரியஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர்வதால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. சவால்களை சமாளிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்தோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தந்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.

உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும். வசதி, செல்வாக்கு உள்ளவர்களின் பேச்சை கண்டு மயங்கி தவறான பாதையில் சென்று விட வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் கூட பெரிய சண்டையில் போய் முடியும். வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். மனைவியிடம் எதையும் மறைக்க வேண்டாம். அவருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். முக்கிய விஷயங்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரையெல்லாம் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையெல்லாம் சிலர் பரப்புவார்கள்.

வங்கி சேமிப்புக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வெளிவட்டாரத்திலும் நிதானம் அவசியம். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது. உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில நேரங்களில் தன்னம்பிக்கையில்லாமல் போகும். கடந்த காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். இப்போது அது மாதிரியான வாய்ப்புகள் வந்தால் நான் மிக அருமையாக செய்து முடிப்பேன் என்றெல்லாம் நினைத்துக் கொள்வீர்கள். போனது போகட்டும் இனி வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். மனைவிக்கு ஹார்மோன் பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி வந்துப் போகும். சிலர் உத்யோகத்தின் பொருட்டு மனைவியை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். 
 
உங்களின் 7-ம் வீட்டை குரு தனது 5-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்ப, சூழ்நிலை உருவாகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. அதிக வட்டிக்கு வாங்கிய கடனை எவ்வாறு அடைக்கப் போகிறோமோ என்று முழிபிதுங்கி இருந்தீர்களே! இனி முழு கடனையும் பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு இல்லாவிட்டாலும், ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கும் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்தபடி நல்ல பெண் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.     
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.

உங்களது லாப வீடான 11-வது வீட்டை குரு தனது 9-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்களை இழிவாகவும், ஏளனமாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். ஷேர் மூலமாக பணம் வரும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, கூடுதல் தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். எந்த காரியத்தை தொட்டாலும் உடனே முடிக்க முடியாமல் போகும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஊர் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். 
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்களின் பிரபல யோகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் முன்கோபம் குறையும். சாந்தமாவீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகன வசதிப் பெருகும். எதிர்பார்த்து ஏமார்ந்துப் போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும்.      
  
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் சேவகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். 
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். தாயாருக்கு முதுகு வலி, மூட்டு வலி, சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். 

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.     
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அரசுக் காரியங்கள் இழுபறியாகும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். வருங்காலம் பற்றிய பயம், தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உதவாமல் போக வாய்ப்பிருக்கிறது. எனவே மாற்றுவழி யோசிப்பது நல்லது.   
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாகன விபத்துகள், மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, சையனஸ் இருப்பதைப் போல் லேசான தலை வலி வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 
 
வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். புது முயற்சிகளோ, பெரிய முதலீடுகளோ வேண்டாம். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியமாக இருந்து விட வேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுங்கள். ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரி பாகங்கள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். விட்டுக் கொடுத்து போங்கள்.
 
உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். அவர்களிடம் உஷாராக பழகுங்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீரயோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் சற்று தாமதமாகும்.       
 
கன்னிப்பெண்களே! கெட்டவர்கள் அன்பாகப் பேசினாலும் ஒதுக்கித்தள்ளுங்கள். இரும்பு, கால்சீயச் சத்து உடம்பில் குறையும். மேலை நாட்டு உணவு தவிர்த்து விட்டு பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். ஃபேஸ் புக், இமெயிலை எல்லாம் கவனமாகப் பயன்படுத்துங்கள். வேலைக் கிடைத்தாலும் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி வரும்.    
      
மாணவ-மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள்.      
 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். சக கலைஞர்களால் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். 
 
பரிகாரம்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வை இழந்தவர்களுக்கு உதவுங்கள்.