வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (17:03 IST)

கன்னி - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சூரியனும், புதனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும்.

உங்களது பலம், பலனத்தை உணர்ந்து உங்களை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.
 
அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடிவடையும். உறவினர், நண்பர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். ஆனால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் நெருங்கிய உறவுக்காரர்களுடைய திருமணத்திற்கு சீர், சனத்தி செய்ய கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வரும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காமல் அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள்.
 
உங்கள் குடும்பத்தினரைப் பற்றி குறைத்துப் பேச வேண்டாம். காலில் சக்கரம் கட்டினார் போல பயணங்களும், அலைச்சல்களும் அடுத்தடுத்து இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். செவ்வாய் 2-ல் நிற்பதால் வீண் விரையங்கள், சின்ன சின்ன கவலைகள், கண் எரிச்சல், பேச்சால் பிரச்னைகள், வீடு, மனை வாங்குவதில் வில்லங்கம் வந்துச் செல்லும்.
 
இந்த 2016-ம் ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் மனோபலம் கூடும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் ஆலோசனைகளையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
 
மகளுக்கு வரன் தேடி அலுத்துப் போனீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்தமையும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப மாற்றி அழகுப்படுத்தி, விரிவுப்படுத்துவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை எதிர்த்தவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம். அதற்கான வழிவகைகள் பிறக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வாகனம், சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள்.
 
வருடம் பிறக்கும் போது ராசிக்குள் ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் பேச்சில் தடுமாற்றம், வீண் அலைச்சல், முன்கோபம், எதிலும் ஒரு சலிப்பு, காது வலி, கனவுத் தொல்லை வந்து நீங்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வரும். மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வரும்.
 
ஆனால் 08.01.2016 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகி வருடம் முடியும் வரை 12-ம் வீட்டிலும், ஏழாம் வீட்டிலிருந்த கேது விலகி 6-வது இடத்திலும் மறைவதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்த விடுபடுவீர்கள். கலையிழந்த உங்கள் முகம் இனி மலரும். குடும்பத்தினராலும் ஒதுக்கப்பட்டீர்களே! இனி எல்லோருடனும் மனம் விட்டு பேசும் சூழ்நிலை உருவாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். எதிரும், புதிருமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் இனி அடுத்தடுத்து நடந்தேறும்.
 
மாதக் கணக்கில் தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்றுமதத்தினர், மொழியினரால் திடீர் நன்மை உண்டாகும். என்றாலும் விரைய ஸ்தானத்தில் ராகு அமர்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
 
கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் குரு வக்ரமாகி 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் சுக-சப்தமாதிபதியான குருபகவான் ராசியிலேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள்.
 
அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. சில நேரங்களில் தலைச்சுற்றல் வரும். கொழுப்புச் சத்து உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி அவசியமாகிறது. உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும்.
 
மற்றவர்கள் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் பிணக்குகள் வரும். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.
 
பணம் மற்றும் திருமண விஷயத்திலும் குறுக்கே நிற்க வேண்டாம். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். வாகனம், வீடு வாங்குவதில் தடைகள் ஏற்படக்கூடும். வீடு வாங்கும் முன் வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து க்ளீயரன்ஸ் சர்ட்டிபிகேட் வாங்கியப் பின் வீடு வாங்குவது நல்லது.
 
இல்லையென்றால் வில்லங்கமான வீடுடோ அல்லது இடமோ வாங்கிவிட்டு பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. சிலர் வேறு ஊருக்கு குடிப்பெயர்வீர்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டிக் கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள்.
 
வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அநவாசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். அம்மான், அத்தை வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி தடைப்பட்டு முழுமையடையும்.
 
27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வரும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் உங்களை அவமதிக்கும்படி நடந்துக் கொள்வார்கள்.
 
வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பற்று வரவு சுமார்தான். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யப்பாருங்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். விளம்பரங்களை பார்த்து புது நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஏமாந்துவிடாதீர்கள். புரோக்கரேஜ், சினிமா, சிமெண்ட், மருந்து, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
 
உத்யோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். வளைந்துக் கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்குள்ளாவாதீர்கள். சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடிதங்கள் வரக் கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாகும்.
 
கன்னிப் பெண்களே! நண்பர்கள் விவகாரத்தில் கவனமாக இருங்கள். அவர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கல்யாணம் தள்ளிப் போகும். பெற்றோரின் கனவுகளை நனவாக்க முயலுங்கள். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். முடி உதிர்தல், கண்ணிற்கு கீழ் கரு வளையம் வந்துப் போகும்.
 
மாணவ-மாணவிகளே! ஒருமுறை படித்தால் மட்டும் போதாது அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. வேதியியல் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
 
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள்.
 
அரசியல்வாதிகளே! கட்சி தலைமையின் நம்பிக்கையைப் போராடிப் பெறுவீர்கள். தொகுதி மக்களுடன் நெருங்கிப் பழகுங்கள்.
 
விவசாயிகளே! மகசூல் பெருகும். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
 
இந்தப் புத்தாண்டு அவ்வப்போது சுகவீனங்களை தந்தாலும் தன்னம்பிக்கையால் வெற்றி பெற வைக்கும்.
 
பரிகாரம்:
 
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள எஸ்.புதூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீசனத்குமாரேஸ்வரரை ஏதேனும் ஒரு சதுர்த்தசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கை, கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள்.