1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (16:32 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - மிதுனம்

பந்த, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களே! சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.
 
மற்றவர்களால் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். சிலர் இரு சக்கர வாகனத்தை தந்து விட்டு கார் வாங்க வாய்ப்பிருக்கிறது. பெரிய மனிதர்களின் நட்பால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு சிலர் மாறுவீர்கள்.
 
பேச்சில் கனிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்-. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்புக் கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வீண் சண்டைகள், விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். சிலருக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அல்லது அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும்.
 
வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் நன்மை உண்டாகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.   
 
4.07.2015 வரை குருபகவான் தனஸ்தானமான 2-ல் நிற்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமான முடிவுகளால் எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
5.07.2015 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால் எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தாமதமாகும். மனைவியுடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்துப் போகும். வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல் வரும்.        
 
மேலும் அடுத்தப் பக்கம்..

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சல்களும், திடீர் பயணங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்படும். திட்டமிடாத செலவுகளும் அதிகமாகும். குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். கொழுப்புச் சத்து அதிகமாகும்.  
 
ஜனவரி 07.01.2016 வரை ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 10-ம் இடத்தில் கேதுவும் நிற்பதால் அடுத்தடுத்த வேலைச்சுமையால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு படபடப்பு, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கல் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும்.
 
யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.
 
ஆனால் 08.01.2016 முதல் ராகு 3-ம் வீட்டில் நுழைவதால் தடைப்பட்ட வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள்.
 
கேது 9-ல் நுழைவதால் தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.   
 
சித்திரை, புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் முலமாகவும் அதிக பணம் வரும். மேற்கண்ட மாதங்களில் வேலைக் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. வீடு வாங்குவீர்கள். வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். வெகுநாட்களாக மனதை வாட்டி வதைத்த வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத பிரச்னை ஒன்றிலிருந்து விடுபடுவீர்கள். ஆனி, ஆடி, ஆவணி மத்தியப் பகுதி வரை சனி வக்ரமாகி ராசிக்கு 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வி விஷயத்திலும் அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவது நல்லது. 
 
மேலும் அடுத்தப் பக்கம்..

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்யுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வணிகர் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான இடத்திற்கு தை, பங்குனி மாதங்களில் கடையை மாற்றுவீர்கள்.
 
மருந்து, பெட்ரோ-கெமிக்கல், ஸ்பெக்குலேஷன், கட்டிட உதிரி பாகங்கள், போர்டிங், லாட்ஜிங், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உங்களுக்கு தகுந்தாற்போல் நல்ல பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள்.
 
என்றாலும் ஜனவரி 7-ந் தேதி வரை கேது 10-ல் நிற்பதால் அலுவலகத்தில் சின்ன சின்ன நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புரட்டாசி, பங்குனி மாதங்களில் வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். 
 
கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு சரியாகும். எதிர்பார்த்த உதவிகள் பழைய நண்பர்களிடமிருந்து கிடைக்கும். புதிய நண்பர்களாலும் உற்சாகமடைவீர்கள். உங்கள் தகுதிக் கேற்ப அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். திருமணம் ஏற்பாடாகும். 
 
மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். படிப்பில் மட்டுமல்லாமல் கலைப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். சிலருக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும். 
 
இந்தாண்டு சனிபகவான் சாதகமாக இருப்பதால் சாதிக்க வைத்தாலும், குருவின் போக்கால் சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும் தொலைநோக்குச் சிந்தனையால் முன்னேற வைப்பதாக அமையும்.