1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (16:24 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - கடகம்

நேர்மையை நேசிப்பவர்களே! உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும்.
 
உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். மனஇறுக்கங்கள் குறையும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.
 
உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறமைக் கூடும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்று புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
 
மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வருடம் பிறக்கும் போது சுக்ரனும் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தாயாருடனான பிணக்குகள் நீங்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். 
 
இந்தாண்டு முழுக்க உங்களின் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீக சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். குடும்ப விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.
 
அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகன் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். மனைவிக்கு யூரினரி இன்பெக்ஷன், தைராய்டு பிரச்னை, நெஞ்சு வலி வந்துப் போகும். மனைவி உங்கள் குறை நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளப்பாருங்கள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்துக் கொள்ள வேண்டாம்.
 
வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். விபத்துகள் ஏற்படக்கூடும். பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சில நாட்களில் தூக்கம் குறையும். இ-மெயில் மற்றும் மொபைல் ஃபோனில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.       
 
மேலும் அடுத்தப் பக்கம்..

04.07.2015 வரை குரு ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் காய்ச்சல், மஞ்சள் காமாலை, சளித் தொந்தரவு, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். வெளி உணவுகள், கார, எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னையில் ஒன்று முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சுவிடும் நேரத்தில் மற்றொரு சிக்கல் தலைத்தூக்கும்.
 
வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். சில நேரங்களில் எதையோ இழந்ததைப் போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். "காய்த்த மரம் தான் கல்லடிப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்". அதேப் போல நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.
 
5.07.2015 முதல் குருபகவான் தனஸ்தானமான 2-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். இரக்கப்பட்டு இனி ஏமாறக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். நோய் குணமாகும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள்.
 
தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மழலை பாக்யம் கிடைக்கும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். அரைக்குறையாக நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
 
ஜனவரி 07.01.2015 வரை ராகு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக சில முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
9-ம் இடத்தில் கேது நிற்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். பாகப்பிரிவினை விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். வழக்கை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

ஆனால் 08.01.2016 முதல் ராகு 2-ம் வீட்டில் நுழைவதால் பணப்பற்றாக்குறை நீடிக்கும். கார சாரமாக பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. பார்வைக் கோளாறு வரக்கூடும். கண்ணில் தூசு விழுந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். மருந்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது. காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.
 
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. கேது 8-ல் மறைவதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். என்றாலும் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
 
வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களும் வரும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள்.
 
உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை விரிவுப்படுத்துவீர்கள். கணினி உதிரி பாகங்கள், உணவு, வாகனம், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் முதலில் உங்கள் ஆலோசனைகளை மறுத்தாலும், கடைசியில் உங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள். முரண்டுப்பிடித்த வேலையாட்களை நீக்கிவிட்டு நல்ல படித்த அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.
 
உத்யோகத்தில் உங்களை குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். உயரதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். புரட்டாசி மாதம் முதல் வேலைச்சுமை குறையும். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஒரு ஈடுபாடு வரும்.
 
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உயரதிகாரிகளின் கனிவுப் பார்வை உங்கள் மீது திரும்பும். உங்களுடைய கடின உழைப்பையும் புரிந்துக் கொள்வார்கள். எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் வலிய வந்து நட்புறவாடுவார்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி, அவதூறு வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும்.   
   
கன்னிப் பெண்களே! உங்களுக்கிருந்து வந்த தோல் அரிப்பு, தடிப்பு விலகும். அழகுக் கூடும். உத்யோகம் அமையும். காதல் பிரச்னையால் துவண்டிருந்த நீங்கள் தெளிவாவீர்கள். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். கல்யாணம் கொஞ்சம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும்.   
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் ஸ்தானமான 5-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் விடைகளை எழுதிப்பாருங்கள். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். கணிதம், வரலாறுப் பாடங்களில் அதிகக் கவனம் தேவை. வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். 
 
இந்தப் புத்தாண்டு சோர்ந்திருந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், உங்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவேற்றுவதாக அமையும்.