வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (15:28 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - துலாம்

உயர்வான எண்ணம் உடையவர்களே! உங்களுடைய ராசிநாதனான சுக்ரன் ராசிக்கு 8-ல் மறைந்திருந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும்.
 
சமயோஜித புத்தியும் அதிகரிக்கும். நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை உருவாகும். வீடு மாறுவீர்கள். நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் இடம் வாங்கி புது வீடு கட்டிச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். இரண்டுச் சக்கரம் நான்கு சக்கரமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.
 
உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் 4.07.2015 வரை இனந்தெரியாத மனக்கவலைகளும், வீண் பழி வந்துவிடுமோ என்ற ஒரு அச்சமும், மற்றவர்கள் தன்னை சரியாக மதிக்கவில்லை என்ற ஆதங்கமும் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
05.07.2015 முதல் குருபகவான் லாப வீட்டில் வந்தமர்வதால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். செல்வாக்குக் கூடும். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். எதிர்ப்புகள் குறையும். தடைப்பட்டு இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். வழக்குகள் சாதகமாகும்.
 
உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். முன்கோபமும் குறையும். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் வேலைக் கிடைக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும்.
 
ஏழரைச் சனி நடைபெறுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் உங்களை துரத்திக் கொண்டேயிருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பயம் இருக்கும். பாதச் சனி நடைபெறுவதால் கை, காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. வாகனம் அடிக்கடி பழுதாகும். சின்ன சின்ன விபத்துகளும் ஏற்படக்கூடும். சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருக்கும் கனரக வாகனம் மீது உங்கள் வாகனம் மோதிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொந்த வாகனத்தில் அதிகாலை மற்றும் நள்ளிரவு பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
 
மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இரவல் தரவும், வாங்கவும் வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். அவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
அவ்வப்போது பார்வைக் கோளாறு, காது வலி, தொண்டை வலி வந்துப் போகும். பலவீனமாக இருப்பதாக சில நேரங்களில் உணருவீர்கள். வேலையாட்களை வேலைக்கு வைக்கும் போது வீட்டு வேலைக்காக இருந்தாலும், தொழில் நிறுவனங்களில் வேலைக்கு வைப்பதாக இருந்தாலும் அவர்களை நன்றாக விசாரித்துவிட்டு பணியில் சேர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அறிமுகம் செய்து வைப்பவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பு, மரியாதைக் கூடும். தாயாருக்கு உடல் நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் வாக்குவாதங்கள் வரும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவது, கூடுதல் அறை அமைப்பது, சமையலறை நவீனப்படுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். 
 
உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் 07.01.2016 வரை கேது தொடர்வதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குடும்ப வருமானம் உயரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். மாறுபட்ட அணுகுமுறை மூலமாக பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
ஆனால் 08.01.2016 முதல் 5-ம் வீட்டிற்குள் கேது நுழைவதால் பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவர்கள் உங்களுக்கு எதிரானவர்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
07.01.2016 வரை ராசிக்கு 12-வது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். தூக்கம் குறையும். ஆனால் 08.01.2016 முதல் ராகு 11-வது வீட்டிற்கு வருவதால் திடீர் பணவரவு உண்டு. உயர்ரக வாகனங்களும் வாங்குவீர்கள். புது முதலீடுகள் செய்து தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும்.  
 
உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனைவியின் உடல் நிலை பாதிக்கும். அவ்வப்போது ஈகோ பிரச்னைகளும், வாக்குவாதங்களும் வரும். வீண் சந்தேகத்தால் பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய புனிதமான உறவில் விரிசல்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனைவிக்கு கர்ப்பப்பையில் கட்டி, கழுத்து வலி, முதுகு வலி வரக்கூடும். மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.
 
ஆடி மாதம் மத்தியப்பகுதி முதல் ஆவணி மாதத்திலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரமாகி நிற்பதால் சிறுசிறு விபத்துகள், சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் தேக்க நிலை, மந்த நிலைதான் நீடிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதிலும் இடையூறுகள் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் அதிகரிக்கும். ஆனால் ஜீலை மாதம் முதல் லாபம் அதிகரிக்கும்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபார சூட்சுமங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். புது முதலீடு செய்ய உதவிகள் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களிலும் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். தை, மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுப்படுத்துவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களால் இருக்கக்கூடிய பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
 
உத்யோகத்தில் ஏமாற்றங்களும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் இருந்துக் கொண்டிருக்கும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சமும் உங்களுக்கு இருக்கும். ஆனால் ஆடி மாதம் முதல் உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மூத்த அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும்.
 
உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பும் வரும். தை, மாசி, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வையும் எதிர்ப்பார்க்கலாம். அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் சிலருக்கு கிடைக்கும். அயல்நாடு மற்றும் வெளிநாடு தொடர்புடைய நிறவனத்திலும் சிலருக்கு வேலைக் கிடைக்கும். 
 
மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி நடைபெறுவதால் படிப்பில் அக்கறை காட்டுங்கள். பள்ளிக்கு அடிக்கடி விடுப்பெடுக்க வேண்டாம். விடைகளை எழுதிப்பாருங்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி உங்களுடைய மதிப்பெண் கூடும். நல்ல மாணவர்களின் நட்பும் கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேரக் கூடிய அமைப்பும் உண்டாகும். 
 
கன்னிப் பெண்களே! போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். உண்மையானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோருடன் இருந்து வந்த வாக்குவாதங்கள் நீங்கும். சகோதரங்களுடன் இருந்த மனக்கசப்பு விலகும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். காதலும் கனிந்து வரும்.
 
இந்த புத்தாண்டு ஏழரைச் சனியால் உங்களுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டாலும் குருவின் திருவருளால் சாதித்து காட்டுவதாக அமையும்.