வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (14:51 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - மீனம்

பணம், காசு வந்தும் மாறாதவர்களே! உங்களுடைய ராசிக்கு 11ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய சாதனைத் தொடரும்.

சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். பிரபலங்களும் அறிமுகமாவார்கள். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ப்ளான் அப்ரூவாகி வரும்.

உங்களுடைய ராசியிலேயே கேது 7.01.2016 வரை தொடர்வதால் அவ்வப்போது வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். கணவன்&மனைவிக்குள் விவாதங்களும் வரும். பூச்சிக் கடி, கொசுக்கடியால் தோல் நோய், காய்ச்சல் வரக்கூடும். முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். துரித உணவகங்களில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதேப் போல அசைவ உணவுகளையும் தவிர்க்கப் பாருங்கள். ராசியிலேயே கேது நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் அவ்வப்போது முன்கோபம் அதிகமாகும். குடும்பத்திலும் சின்ன சின்ன பிரச்னைகள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். பழைய நண்பர்களை தவிர்க்க வேண்டாம்.

உங்களுடைய ராசிக்கு 7&ம் வீட்டிலேயே 7.01.2016 வரை ராகு நீடிப்பதால் மனைவிக்கு சின்ன சின்ன ஆரோக்ய குறைவு ஏற்படும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும். எடைமிகுந்தப் பொருட்களை மனைவி சுமக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நடக்கும் போது கால் இடரி விழவும், தலைச்சுற்றில் வந்து கால் இடரி விழவும் வாய்ப்பிருக்கிறது. 8.01.2016 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாக மாறுவதால் அதுமுதல் எல்லாவகையிலும் வெற்றி உண்டாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்&மனைவிக்குள் இருந்த ஈகோப் பிரச்னைகள் நீங்கும். எதிர்பாராத யோகங்கள் உண்டாகும்.

சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும்.  வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பழைய கடன் பிரச்னை தீரும். புதிய சொத்து வாங்குவதற்காக புது கடன் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேக்தை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

உங்கள் ராசிநாதன் குருபகவான் 5&ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களால் அந்தஸ்து உயரும். மகளின் விருப்பப்படி திருமணத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும். அவர்க்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 05.07.2015 முதல் உங்கள் ராசிநாதன் 6&ல் சென்று மறைவதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

உங்களை ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்களை நேரில் பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், பின்னர் உங்களை இகழ்ந்தும் பேசுபவர்கள் அதிகரிப்பார்கள். எல்லாலோரையும் நம்பி எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வீண் பழிகளெல்லாம் வரக்கூடும். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். வழக்கறிஞரை அவ்வப்போது சந்தித்து ஆலோசித்துக் கொண்டிருப்பது நல்லது. அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன் வந்துப் போகும்.

குரு மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். உங்களை விட்டு விலகி பிள்ளைகள் அயல்நாடு செல்வார்கள். 8.1.2016 முதல் உங்களுடைய ராசிநாதனாகிய குருபகவான் ராகுவுடன் சம்பந்தப்படுவதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கொழுப்புச் சத்து அதிகமாகும். கொழுப்புக் கட்டிகளும் வந்துப் போகும். சின்ன சின்ன உடற்பயிற்சிகள் தினசரி செய்வது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குங்கள். விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். பாஸ்போட்டை புதுப்பிக்க தவறாதீர்கள். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்டு இவற்றையெல்லாம் கவனக் குறைவால் இழந்துவிடாதீர்கள்.
 
உங்களுடைய ராசிக்கு 9&ம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தந்தையாரின் உடல் நிலை லேசாக பாதிக்கும். ஆனால் தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். 
உங்களுடைய ராசிக்கு 3&ம் வீட்டில் சுக்ரன் ஆட்சிப் பெற்றிருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தைரியம் பிறக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
 
ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் நிற்கும் போது இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் கண் வலி, பார்வைக் கோளாறு, தொண்டை புகைச்சல் அடிக்கடி வரும். யதார்த்தமாகப் பேசுவதாக சொல்லிக் கொண்டு பிறர் மனம் புண்படும்படி கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். செவ்வாய் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.
 
கடந்த வருடத்தை விட இந்த வருடம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கடையை நல்ல இடத்திற்கு மாற்றவீர்கள். புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அயல்நாடு, வெளிமாநிலத் தொடர்புடனும் புது வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள்.

பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வார்த்தையில் கடுமை காட்டாதீர்கள். பிளாஸ்டிக், கெமிக்கல், உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி&இறக்குமதி வகைகளாலும் லாபம் வரும். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டு. புது சலுகைகளும் வியாபாரத்தில் கிடைக்கும்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்களுக்கும் சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். ஜீலை மாதத்திற்குள் சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம். தேர்வில் தேர்ச்சிப் பெற்று அதன் மூலமாகவும் புது பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் 5.7.2015 முதல் உங்கள் ராசிநாதனும், உத்யோக ஸ்தானாதிபதியான குருபகவான் 6&ல் சென்று மறைவதால் அதுமுதல் உத்யோகத்தில் அலைச்சல், வேலைச்சுமை இருக்கும்.

குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். 8.01.2016 முதல் ராசிநாதன் குரு ராகுவுடன் சேர்வதால் உத்யோகத்தில் வீண் பழிகளை சுமக்க நேரிடும். சின்ன சின்ன அபராதத் தொகையும் செலுத்த வேண்டி வரும். உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களிடமெல்லாம் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். கவனமாக இருங்கள். சக ஊழியர்களைப் பற்றிய குறைப்பாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்களையும், ஈகோப் பிரச்னைகளையும் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
 
மாணவ&மாணவிகளே! படிப்பிலே முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரைகள் எழுதி பரிசுப் பெறுவீர்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் ராசிநாதன் வலுவிழப்பதால் விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்த்துவிடுங்கள். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தைரியமாக கேளுங்கள். 

கன்னிப் பெண்களே! நீங்கள் நினைத்தப்படி எல்லாம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்துக் கொள்வார்கள். கல்யாணம் கூடி வரும். வேலைக் கிடைக்கும். உங்களுக்கிருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும்.
 
இந்த மன்மத ஆண்டு வாழ்க்கையில் சில நெளிவு, சுளிவுகளைக் கற்றுத் தருவதாகவும், சிக்கனமும், சேமிப்புகளும் தேவை என்பதை உணர வைப்பதாகவும் அமையும்.