வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (15:18 IST)

மீனம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

ஏமாற்றங்களைக் கண்டு அஞ்சாத நீங்கள், நேர்மறைச் சிந்தனை அதிகம் உள்ளவர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு திக்கு திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரண காரியமே இல்லாமல் பிரச்சனைகளில் சிக்க வைத்து, வாழ்க்கை மீதே ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்திய சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் இருளில் இருந்த நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எப்போதும் கோபப்பட்டு கொண்டேயிருந்தீர்களே! இனி சாந்தமாவீர்கள்.

தொட்டதுக் கெல்லாம் வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும் தான் மிஞ்சியதே. அவையெல்லாம் இனி விலகும். சின்ன வேலையை கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உற்சாகத்துடன் அனைத்தையும் முடித்துக்  காட்டுவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ என்றெல்லாம் குழம்பினீர்களே! இனி தெளிவுப் பிறக்கும். பல நாட்கள் தூக்கமின்றி அவஸ்தைப்பட்டீர்களே! இனி நிம்மதியாக உறக்கம் வரும்.

உங்களை விட வயத்தில் குறைவானவர்கள், தகுதியில் குறைந்தவர்களிடமெல்லாம் கூனிக் குறுகி அவமானப்பட்டு நின்றீர்களே! அந்த நிலையெல்லாம் மாறும். இனி தன்னம்பிக்கையுடன் தலை நிமருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீர்கள். மனதில் தொக்கி நின்ற தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களையெல்லாம் மீட்பீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.  பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த பணத்தை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.

ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து ஒரு வீடோ, அல்லது மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களே! இப்போது நிறைவேறும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். 

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 9-ம் வீட்டில் சனி செல்வதால் பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனியாக 8-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் பிரச்னைகள், காரியத் தடைகள், பண இழப்புகள், ஏமாற்றங்கள், எதிலும் பிடிப்பற்றப் போக்கு வந்துச் செல்லும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தன்னிச்சையாக செயல்பட தொடங்குவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்-.  
உங்கள் லாபாதிபதியும்-விரையாதிபதியுமான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். புது வேலைக் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் சோர்ந்திருந்த நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள், பிறமொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள். அவ்வப்போது வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். 

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வாகன வசதிப் பெருகும். தாய் சொத்து கைக்கு வரும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு.   
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கள் வந்துப் போகும்.
 
சனிபகவான் 3-ம் வீட்டை பார்ப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு, மரியாதைக் கூடும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் இருக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். 
 
வியாபாரத்தில் பழைய பிரச்சனைகளை தீர்க்க புது வழி கிடைக்கும். முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது யுக்திகளை கையாளுவீர்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி அழகு படுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன், புரோக்கரேஜ் மூலம் லாபம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் அலட்சியப் போக்கு மாறும். வேலைச்சுமை குறையும். தொல்லை தந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் வரும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். 
 
கன்னிப்பெண்களே! தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். மறதி, மந்த நிலையிலிருந்து விடுபடுவீர்கள். பசியின்மை, தூக்கமின்மை, முகப்பரு நீங்கும். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் உங்கள் உணர்வுகளை மதிப்பார்கள். புது வேலைக் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.  
இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாகவும் அமையும். 
 
பரிகாரம்:
திருச்செந்தூர் அருள்மிகு முருகப் பெருமானை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள். பழுதடைந்த பள்ளியைப் புதுப்பிக்க உதவுங்கள்.