1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (18:42 IST)

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - மகரம்

மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கை உடைய நீங்கள் மற்றவர்கள் செய்யும் தவறை இங்கிதமாக எடுத்துரைப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
ராகுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், உத்தியோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களின் அறிவாற்றலையும், திறமைகளையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். 
 
தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்திலும் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமல் தவித்தீர்களே! இனி குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். என்றாலும் ராகு 9-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாருக்கு இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்துப் போகும். 
 
பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். 
 
பாகப்பிரிவினை பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள். 

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் வேலைச்சுமை, வி. ஐ. பிகளுடன் கருத்து மோதல்கள், களைப்பு, ஒருவித வெறுப்புணர்வு வந்துச் செல்லும். உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீட்டில் கழிவு நீர் குழாய், குடி நீர் குழாய் பழுது, மின் கசிவுகள் ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள்.  
 
சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பாசப்பிணைப்பு அதிகரிக்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பாதியில் நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். உங்களுடைய புதுத் திட்டங்களை ஆதரிப்பார். டி.வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன் சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும்.  
 
ராகுபகவான் உங்களின் அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். தூக்கம் குறையும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 
 
மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
 
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். 
 
கலைத்துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் தன்மானத்தை யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் சில வாய்ப்புகளைப் பெற்று படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெறுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும். 
 
  வியாபாரிகளே! அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்-. பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாட்களின் விடுப்பால் நீங்கள் இறங்கி செய்ய வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். புரோக்கரேஜ், மூலிகை, பெட்ரோ-கெமிக்கல், பிளாஸ்டிக், கண்சல்டன்ஸி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் பிரச்னை தந்தாலும் மற்றொருவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.  
 
உத்தியோகஸ்தர்களே! எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஒரு அடிமைப்போல் வேலை பார்த்தீர்களே! உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித்தள்ளினாரே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புது வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும். பணியிலிருந்த தடைகள் விலகும். 
 

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். சவால்களில் வெற்றிப் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.
 
 வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஷேர் மூலமாக பணம் வரும். 
 
மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வி. ஐ. பிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். கௌரவப் பதவிகள் வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். 
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். விருந்தினர் வருகை, சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். 
 
உங்கள் ராசிநாதனும்-தனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். வி. ஐ. பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். 
 
கேதுபகவான் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும். சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். யாரும் தன்னை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்று புலம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம். சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 
 
வியாபாரம் செழிக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் உணர்வார்கள். சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. 
 
இந்த ராகு-கேது மாற்றத்தில் ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கேதுவால் வீடு, மனை வாங்கும் யோகமும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறி பணவரவும், அதிகரிக்கும். 
 
பரிகாரம்
 
கும்பகோணம் திருவாரூர் பாதையிலுள்ள நன்னிலத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.