வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (18:41 IST)

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - தனுசு

சரிநிகர் சமத்துவத்திற்காக போராடும் நீங்கள், ஆண்டவன் படைப்பில் அடிமை யாருமில்லை என்று நினைப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
இராகுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து வாழ்வில் ஓரளவு வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும், புதிய தொடர்புகளையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். 
 
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். 
 
பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். 
 
அவசரத்திற்கு கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துப் போகும். தலைக்குனிவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். எனவே கவனமாக இருங்கள். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.  

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். திடீர் பயணங்கள் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும்.    
                                            
அஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் சிம சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். மன அழுத்தம், டென்ஷன், கழுத்து வலி, தொண்டை வலி, சையனஸ் இருப்பதைப் போல் தலை வலி வந்து நீங்கும். கூடாபழக்கமுள்ள நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.  
 
ராகுபகவான் உங்களின் பாக்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் பிதுர்வழி சொத்து பிரச்னை தீரும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவரின் ஆதரவுப் பெருகும். தந்தைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சி. எம். டி. ஏ. , எம். எம். டி. ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். லோன் உதவிகளும் கிடைக்கும்.   
  
மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசு, பாராட்டுக் கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.    
 
கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். தைரியம் கூடும். கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும்.
உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அண்டைமாநிலம், அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். 
    
கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். கிசுகிசுத் தொந்தரவுகளும், விமர்சனங்களும் அதிகமாகும். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். 
 
வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்திற்கு கடையை மாறுவீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். கமிஷன், துணி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். சந்தை ரகசியங்களைத் தெரிந்துக் கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம்.     
 
  உத்தியோகஸ்தர்களே! ராகு 10-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகும். 
 

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விடாமல், பல விதமான பிரச்னைகளில் சிக்க வைத்து, சொந்த-பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்திய கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் எப்போது பார்த்தாலும் ஒருவித மனஇறுக்கத்துடனும், கோபத்துடன் காணப்பட்டீர்களே! இனி அவற்றிலிருந்து எல்லாம் விடுபடுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், தயக்கம் இருந்து வந்ததே, இனி உங்களின் வாழ்கை பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். 
 
வசதி வாய்ப்புகள் அதிகமிருந்து பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும் பாதித்ததே, இனி கவலை வேண்டாம் அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்களிலிருந்து மீட்பீர்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகன் பொறுப்பாக நடந்துக் கொள்வார். அவருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.
 
 உங்களை மதிக்காமல் சென்ற சொந்த-பந்தங்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள். என்றாலும் கேது 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை, கணுக்கால் வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கழிவு நீர் பிரச்சனை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாட்கள் பிரச்சனையும் வந்துப் போகும். 
 
எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. விலை உயர்ந்தப் பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். வீடு வேண்டிய சூழல் உருவாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும். 
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் சப்தமாதிபதியும்-தசமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் திடீர் திடீரென்று ஒருவித மனோபயம், முன்கோபம், வீண் டென்ஷன், அலர்ஜி, நரம்புச் சுளுக்கு கோளாறு, தோலில் நமைச்சல் வந்துப் போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் சந்தேகங்களை தவிர்க்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். விரும்பத்தாக இடமாற்றங்கள் வரக்கூடும்.        
     
உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் பயனடைவீர்கள். தள்ளிப் போன சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணம் கூடி வரும். 
    
கேதுபகவான் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் அழகு, அறிவு, ஆரோக்யம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளி மாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஷேர் மூலம் பணம் வரும். 
 
வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையுடன் செல்வாக்குக் கூடும். உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். புது பொறுப்புகள், பதவிகளுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். 
 
இந்த ராகு-கேது மாற்றம் ஒய்வெடுக்க முடியாத அளவிற்கு பரபரப்பையும், அதிக நேரம் உழைக்க வைப்பதாக இருந்தாலும் அந்தஸ்தையும் ஓரளவு உயர்த்துவதாக அமையும். 
 
பரிகாரம்
 
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு அருகேயுள்ள கோடகநல்லூர் ஈசனை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணிகளில் கலந்து கொண்டு இயன்ற அளவு உதவுங்கள்.