1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (16:59 IST)

சிம்மம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! உங்களின் பாக்யாதிபதி செவ்வாய் 3-ம் இடத்தில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.

பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உப்பு விற்க போய் மழை வந்த கதையாய் எதை தொடங்கினாலும் இழப்புகளும், ஏமாற்றங்களும் தானே ஏற்பட்டது இனி அந்த நிலை மாறும் அரைக்குறையாக நின்று போன வேலைகளெல்லாம் முழுமையடையும். மனக்கலக்கத்துடன் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்.
 
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவும். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பிறக்கும். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும்.
 
உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. எந்த விஷயத்தையும் ஆழ்மனதில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டாம்.
 
இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் புது வேலைக் கிடைக்கும். விலை உயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை விலகும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குறைக் கூறிக் கொண்டிருப்பவர்கள், புலம்பிக் கொண்டிருப்பவர்களையும் தவிர்ப்பீர்கள்.
 
இந்தாண்டு முழுக்க சனி 4-ம் வீட்டில் அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றுவது நல்லது. தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாயாரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அவருக்கு இரத்த அழுத்தம், சளித் தொந்தரவால் மூச்சுத் திணறல் வந்துப் போகும்.
 
குடும்பத்தினருடன் அமர்ந்து பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் போகும். மனைவி சில நேரங்களில் கோபமாகப் பேசுவார். மனைவிக்கு தைராய்டு நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். லாகிரி வஸ்துக்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. விதிகளை மீறி கூடுதல் தளம் அமைப்பது, கூடுதல் அறை அமைப்பதை தவிர்ப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, விற்பனை வரிகளை உரிய காலக்கட்டத்திற்கு செலுத்தப்பாருங்கள். அரசாங்கத்திற்கு அபராதம் கட்ட வேண்டி வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும்.
 
வருடப் பிறப்பு முதல் 07.01.2016 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் நிற்பதால் கண் வலி, வீண் வாக்குவாதம், பல் வலி, எதிர்பாராத செலவுகள், சிறுசிறு விபத்துகள், கால் வலி வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம். 08.01.2016 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள்.
 
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சை கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இன்பெக்ஷன், அலர்ஜி, வயிற்று உப்புசம், வாய்ப்புண், ஹார்மோன் பிரச்னைகள் வந்து நீங்கும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.
 
சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களில் ஒரு சிலர் கூட நீங்கள் மாறி விட்டதாக கூறுவார்கள். முன்பு போல அவர் இல்லை. இப்போதெல்லாம் கோபப்படுகிறார் என்றெல்லாம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்கள். ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
 
ஆனால் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வரும். சின்ன சின்ன பிரச்னைகளெல்லாம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். ஈகோப் பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்விக் கேட்டு குழம்புவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் வக்ரமாகி 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள்.
 
மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மாற்றுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். நோய் குணமாகும். அழகு, இளமைக் கூடும். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.
 
கூடாப்பழக்கம் உள்ளவர்களின் நட்பை விட்டு முழுமையாக விலகுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்றப் போக்கும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப்பட்டு வாக்குறுதி தந்து அதை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். யாரிடமாவது சண்டை போட வேண்டுமென நினைப்பீர்கள்.
 
உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சிலர் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். என்றாலும் முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.
 
முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிப்புரிவீர்கள். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! உடல் நலம் சீராகும். உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ற நல்ல வரன் அமையும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமருவீர்கள். மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள்.
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றால் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும். என்றாலும் அவ்வப்போது சலிப்பு, சோர்வு வந்து நீங்கும்.
 
கலைத்துறையினரே! போட்டிகள் குறையும். திரையிட முடியாமல் தடைப்பட்டிருந்த உங்களது படைப்பு வெளியாகும். உங்களைப் பற்றிய வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும்.
 
அரசியல்வாதிகளே! புது பொறுப்புகள் ஏற்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் ஆதரவுக் கூடும்.
 
விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விளைச்சல் அதிகரிப்பதால் சந்தோஷமடைவீர்கள். அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
 
இந்த 2016ம் ஆண்டு உங்களுக்கு சின்ன சின்ன ஏமாற்றங்களை தந்தாலும் சகிப்புத் தன்மையாலும், முற்போக்குச் சிந்தனையாலும் சாதிக்க வைக்கும்.
 
பரிகாரம்
 
நாகப்பட்டிணம் மாவட்டம் ஒழுகைமங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமாரியம்மனை பஞ்சமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். காது கோளாதவர்களுக்கு உதவுங்கள்.