1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கிருஷ்ண ஜெயந்தி விரத வழிபாடு செய்யும் முறைகள்...!!

மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமே கிருஷ்ண அவதாரமாகும்.  கிருஷ்ணராக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரே நம் வீட்டிற்கு வந்து நமக்கு அருள்புரிவதாக ஐதீகம். திருமணம் ஆனவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து  வழிபட்டால் விரைவில் அந்த கிருஷ்ணரே குழந்தையாக வந்து அவதரிப்பார்.
 
சிறு பிள்ளைகளுக்கு கிருஷ்ண லீலைகளையும், அவர் செய்த குறும்புகளையும் கதையாக சொல்ல வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியை காலை நேரத்தில்  வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிபடுவதே சிறந்ததாகும்.
 
ஏனென்றால் கிருஷ்ணர் நடுநிசியில் அதாவது நள்ளிரவில் பிறந்தாதாக புராணங்கள் கூறுகின்றது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று முழுவதும் விரதம்  இருந்து மாலை வேளையில் பூஜையை தொடங்கி இரவு முழுவதும் பூஜைசெய்து மறுநாள் காலையில் பூஜை நிறைவு செய்து கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக படைத்தவற்றை முதலில் சாப்பிட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
 
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று அதிகாலையிலேயே வீட்டினை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட வேண்டும். மாவிலை, தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களினால் அலங்காரம் செய்யவேண்டும்.
 
பின்னர் அரிசிமாவினால் குழந்தையின் கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த ஆலிலை கிருஷ்ணனை நம் வீட்டிற்குள் அழைத்து வருவதாக நம்பிக்கை.
 
வீட்டில் கிருஷ்ணர் சிலை, அல்லது கிருஷ்ணர் படம் இருந்தால் அதனை சுத்தம் செய்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். பூஜைக்கு நெய்வேத்தியமாக கண்ணனுக்கு பிடித்த  வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பலகாரங்களை செய்து படைக்க வேண்டும்.என  பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும்.