1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (13:44 IST)

ஜய வருட ராசி பலன்கள் - கடகம்

புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். உங்களின் பாதகாதிபதியான சுக்கிரன் 8ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை கடினமானதாக இருந்த  காரியங்களை யெல்லாம் எளிமையாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 
 
அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் பிறப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். 
 
எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். ஜூன் 12 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் குரு மறைந்து காணப்படுவதால் ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் மறுபக்கம் அதற்கேற்ப செலவினங்களும் கூடிக் கொண்டே போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று காணிக்கையை செலுத்துவீர்கள். 
 
ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து விலகும். தலைவலியாக இருந்தாலும் பெரியதாக பயம் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் புகையிலை சார்ந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும். மஞ்சள் காமாலை, காய்ச்சலால் சோர்வடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லதாகும். ஈகோ பிரச்னையால் மன இறுக்கம் அதிகரிக்கும்.
 

ஜூன் 20ந் தேதி வரை சர்ப்ப கிரகங்களான ராகு 4ம் வீட்டிலும், கேது 10ம் வீட்டிலும் தொடர்வதால் உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சி செய்வார்கள். அதனால் எதையுமே வெளிப் படையாக பேசி விடுவதுதான் நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். எடுத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் திணறுவீர்கள். உத்தியோகத்தில் பிடிப்பற்றபோக்கு வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஜூன் 21ந் தேதி முதல் ராகு 3ம் வீட்டில் நுழைவதால் படபடப்பு, பயம் விலகும். தைரியம் கூடும். உங்கள் வார்த்தைக்கு இனி மதிப்பு கூடும். தள்ளிப்போன திருமணம் கூடிவரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். ஆனால், கேது ஜூன் 21ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவருடன் மோதல்களும் வந்து செல்லும். தந்தை வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அவர்கள் பிரச்னை என்று ஆரம்பிப்பதற்கு முன்னரே நீங்கள் இருக்கும் பழைய விவகாரங்களுக்கு தீர்வு காணுங்கள்.  
   
டிசம்பர் 15 வரை சனி 4ம் வீட்டில் நின்று அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் வாகனத்தை இயக்கும்போது அலைபேசியை பயன்படுத்த வேண்டாம். ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கத் தவறாதீர்கள். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டியது வரும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். டிசம்பர் 16 முதல் சனி 5ம் வீட்டில் நுழைவதால் வீண் பழி, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். 
 
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டியது வரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அதேபோல வேலையாட்களிடம் எல்லா வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அதேசமயம் கடுமையாகவும் பேச வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். மார்கழி பிற்பகுதி, பங்குனி மாதங்களில் புதிய தொடர்புகள் கிடைக்கும். இப்போது செய்கின்ற தொழிலுக்கு இணையாக வேறொரு தொழிலும் செய்ய வேண்டிய வாய்ப்புகளும் வரும். லாபம் கணிசமாக உயரும். வேற்று மதத்தவர்கள், மாநிலத்தவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களுடன் சச்சரவு வரும். கமிஷன், புரோக்கரேஜ், ஏஜென்சி, மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். 
 

உத்தியோகத்தில் நிம்மதியற்ற போக்கும் நிலவும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகாரிகள் தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வது நல்லது. அடிக்கடி இடமாற்றங்களும் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகும். எவ்வளவுதான் உண்மையாக உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். உங்கள் திறமையை வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான புகார்களில் சிக்க வைத்து கோர்ட், கேஸ் என்று அலைக்கழிப்பார்கள்.  
  
கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டுவிட்டு யதார்த்தமான படைப்புகளை தரப் பாருங்கள். இதுவரை போனது போகட்டும். இனி வருவதாவது நன்றாக இருக்கட்டும் என்று எண்ணி கடின உழைப்பைக் கொட்டுங்கள். உங்களைப்பற்றிய வதந்திகள் வரும்.  
      
மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு படிப்பில் முழு  கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். நல்லவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். 
 
கன்னிப் பெண்களே! காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நண்பர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கல்யாணம் தள்ளிப்போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். 
 
இந்த ஜய வருடம் ஆரோக்ய குறைவால் செலவுகளையும் அலைச்சலையும் தந்தாலும் நடு நடுவே வெற்றியை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
 
பரிகாரம் : தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தி தலத்திலுள்ள வீணா தட்சிணாமூர்த்தியை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.