1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P. Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (13:08 IST)

ஜய வருட ராசி பலன்கள் - மேஷம்

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். இந்த ஜய வருடம் உங்களுக்கு 6வது ராசியில் பிறப்பதால் அடிக்கடி வேலை விஷயமாகவோ, வெளியூர்களுக்கோ சென்று வரவேண்டியிருக்கும். சிலருக்கு வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை கிடைக்கும். 
 
வருடம் பிறக்கும் போது உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் வக்ரமாகி நிற்பதால் ஒவ்வாமை, உடலில் சோர்வும் களைப்பும் வந்து நீங்கும். வெளியூர்களுக்குச் செல்லும்போதும் சுயமாக வாகனத்தை ஓட்டும்போதும் கவனம் தேவை. சகோதர வகையில் பிரச்னைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மனத்தாங்கல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது எதுவாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள்.  
 
ஜூன் 12 வரை உங்கள் யோகாதிபதியான குருபகவான் 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதனால் காரியத் தடைகளும், உறவினர், நண்பர் பகையும் வந்துபோகும். இளைய சகோதர வகையில் செலவுகளும், பிரிவுகளும் வந்து நீங்கும். ஜூன் 13ந் தேதி முதல் குரு 4ம் வீட்டில் சென்று அமர்வதால் ஓரளவு பணவரவு அதிகரிக்கும். ஆனால், தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். உறவினர்களில் சிலர் கண்டும் காணாமல் சென்று கொண்டிருப்பார்கள். 
 
பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். பங்குச் சந்தையில் பணம் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பேருந்து, புகை வண்டியில் படிகட்டுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. சாலைகளை கடக்கும்போதும் அவசரம் வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் புகழடைவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகம், உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டியிருக்கும்.  
 

ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசியிலேயே நீடிப்பதால் தனக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப்போல பிரமை வந்து நீங்கும். முன்கோபம் அதிகமாகும். உணர்ச்சி வேகத்தில் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். உறவினர்களிடம் எல்லா விஷயங்களிலும் தலையிடும் அளவுக்கு அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜூன் 21ந் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு கேதுபகவான் விலகுவதால் மனச் சலனங்கள், படபடப்பு, டென்ஷன் போன்றவை குறையும். ஆரோக்யமும் அழகும் கூடும். இதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தோல் நோய், தலைவலி விலகும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடிவரும். 
 
டிசம்பர் 15 வரை கண்டகச் சனி நடைபெறுவதாலும், ஜூன் 20 வரை ராகு-சனியுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலும் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அறுவை சிகிச்சை வந்துபோகும். வீண் சந்தேகங்களாலும், ஈகோ பிரச்னையாலும் பிரியும் நிலைக்கு சிலர் தள்ளப்படுவீர்கள். சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதாக்காமலும், பழைய பிரச்னைகளை பேசாமலும் இருப்பது நல்லது. டிசம்பர் 15ந் தேதி வரை உங்கள் ராசியை சனி பார்ப்பதால் மறதி, மனஇறுக்கம், வீண் சந்தேகம் வந்து நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 14.7.2014 முதல் 3.9.2014 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமாவதால் அந்த காலகட்டத்தில் விபத்துகள், பணயிழப்பு, ஏமாற்றங்கள் வந்துபோகும். டிசம்பர் 16 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதால் எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை, சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. 
 
ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவடைவதால் அதுமுதல் மனதில் நிம்மதி, சகோதர வகையில் இருந்து வந்த பகையும் நீங்கும். சொத்துப் பிரச்னை தீரும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். 25.9.2014 முதல் 18.10.2014 வரை சுக்கிரன் வலுவிழந்து காணப்படுவதால் அந்தக் காலகட்டத்தில் பல் வலி, பார்வைக் கோளாறு, ஆபரண இழப்பு, வாகன விபத்து, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். ஆவணி, தை, மாசி மாதங்களில் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். திருமணம் கூடி வரும். சிலர் வீடு கட்டி புது வீட்டிற்கு மாறுவீர்கள்.    
வியாபாரத்தில் நவீன விளம்பர யுக்திகளை கையாளுவது நல்லது. பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்னை தருவார்கள். ஆனாலும், சில நாட்களிலேயே சரியாகும். வேலையாட்களிடம் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 
 

நன்கு ஆராய்ந்து பின்னர் புதிய பங்குதாரர்களை சேர்ப்பது நல்லது. வெளிமாநில வேலையாட்களை நம்பகமான சிபாரிசு இல்லாமல் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், டிராவல்ஸ், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். அனுபவமில்லாத புதிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் வரும். செய்யும் தொழிலுக்கு இணையாக வேறொரு தொழிலைச் செய்யவும் முயற்சிப்பீர்கள். 
 
உத்தியோகத்தில் உயரதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை சக ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டாம். தனி நபர் விமர்சனத்தை அலுவல கத்தில் தவிர்த்து விடுங்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என்று இருங்கள். அன்றைய வேலைகளை அன்றே முடித்து விடுவது நல்லது. ஏனெனில், உங்களின் மீதுள்ள முக்கிய புகாரே உடனே வேலையைச் செய்வதில்லை என்பதுதான். ஜூன் 13ந் தேதி முதல் உத்தியோக ஸ்தானத்தை குரு பார்க்க இருப்பதால் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள் போராடி தங்கள் உத்தியோகத்தை தக்க வைக்க வேண்டியது வரும். இந்தாண்டு பிறக்கும் போது சனி உங்களின் யோகாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் நிற்பதால் அயல்நாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. 
 
கலைத்துறையினரே! கடந்த வருடத்தை விட இந்த ஆண்டில் பரபரப்பாவீர்கள். படைப்பாற்றல் பெருகும். மூத்த கலைஞர்களின் சிபாரிசு மூலம் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளியிடப் படாமல் முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் வெளிப்பட்டு புகழடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். 
 
கன்னிப் பெண்களே! உங்களின் சுகாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் தெளிவு கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடிச் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடுதலான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக மொழியறிவு சார்ந்த அறிவையும், பொது அறிவுத் திறனையும் வளர்த்துக் கொள்வது நல்லது. 
 
இந்த ஜய வருடம் நிம்மதியையும், பணவரவையும் தருவதாக அமையும். 
 
பரிகாரம் :  சென்னை - மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சரபேஸ்வரரை சனிக்கிழமை அல்லது அமாவாசை திதியில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.