1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:27 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்!

சுற்றுப்புற சூழ்நிலையை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்துவதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரையச் செலவுகள், ஏமாற்றங்கள், தூக்கமின்மையை தந்துக் கொண்டிருந்த குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்றப் போக்கும் அதிகரிக்கும். 
 
அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப்பட்டு வாக்குறுதி தந்து அதை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். ஜென்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். 
 
சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். சில நேரங்களில் தலைச்சுற்றல் வரும். மனஉளைச்சலால் ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். 
 
தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள்.

சிலர் உங்களிடம் நடிப்பதாகவும், உங்களிடம் யாரும் உண்மையான பாசம் காட்டுவதில் என்றும் சில நேரங்களில் நினைப்பீர்கள். உங்கள் தன்மானத்தை பாதிக்குமளவிற்கு சில சொந்த-பந்தங்கள் நடந்துக் கொள்வார்கள். பேசுவார்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.  
 
குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். சிலர் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவீர்கள். தியானம், பொது சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது. 
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் சஷ்டம-பாக்யாதிபதியான குருபகவான் சுய நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். எதிர்ப்புகள் குறையும். கல்யாணம் கூடி வரும். குடும்பத்தில் இருந்த சச்சரவு குறையும். வழக்கு சாதகமாகும். தந்தையார் ஆதரிப்பார். அவருக்கு இருந்த ஆரோக்ய குறைவு சீராகும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். 
  
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் சப்த-அஷ்டமாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கடன் பிரச்னையால் கௌரவத்திற்கு பங்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை சேவகாதிபதியும்-விரையஸ்தானாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், கனவுத் தொல்லை, சளித் தொந்தரவு, கழுத்து வலி, வாகனப் பழுது வந்து நீங்கும். இளைய சகோதரங்களால் சங்கடங்கள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. 
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும்.  
 

22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். 
 
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கத் தான் செய்யும். புது முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். யாருக்கும் முன் பணம் தந்து ஏமாற வேண்டாம். வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்துக் கொள்கிறார்கள் என்று வருத்தப்படுவீர்கள். 
 
வாடகைக்கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.
 
உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்ன சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். முறைபடி தேர்வெழுதி வெற்றி பெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வை பெற போராட வேண்டி இருக்கும்.   
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது-. பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். நெருக்குத் தீணிகளை குறையுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது.  
 
கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள், கிசுகிசுகள் வந்தாலும் விரக்தியடையாதீர்கள். சுய விளம்பரத்தை விட்டு விடுங்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.   
இந்த குரு மாற்றம் ஆரோக்ய குறைவையும், வேலைச்சுமையையும், எதிர்மறை எண்ணங்களையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை தானே உணரும் சக்தியையும் தரும். 
 
பரிகாரம்
 
பழனி மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானையும், சித்தர் பெருமான் போகரையும் சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். தாயில்லாப் பிள்ளைக்கு உதவுங்கள்.