1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:30 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - துலாம்!

வலுவான கொள்கை, கோட்பாடுகளுடன் வாழும் நீங்கள் வழுக்கி விழுபவர்களை வாழ வைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தந்த குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியை பறித்துவிடுவாரே! கையில் காசுபணம் தங்காதே! என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள். 
 
ஒரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். 
 
உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். தன்னம்பிக்கை குறையும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். 
 
உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். 
 
புது வீட்டில் குடி புகுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டை பார்ப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். 
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் சேவகாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் சுக-பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக் கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும்.வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும்.
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை உங்களின் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். 
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 11-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்குக் கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.       
 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம். தூக்கம் குறையும். நண்பர்களுடன் மோதல்கள் வரும். யூரினரி இன்பெக்ஷன், தோலில் நமைச்சல், மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். இடையிடையே பணவரவும், வி.ஐ.பி தொடர்பும் கிடைக்கும்.   
 
அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். பங்குதாரர்களிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ-கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.
 
உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். 
 
சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களைவிட தகுதியில் குறைந்தவர்கள், திறமையில் குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கிறது என்று அவ்வப்போது வருந்துவீர்கள். உங்களுடைய அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டி வரும்.  
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். எதிர்காலம் பற்றி யோசியுங்கள். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும்.
 
மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். 
 
கலைத்துறையினர்களே! சிறுசிறு வாய்ப்புகளாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.  
 
இந்த குரு மாற்றம் உங்களைக் கொஞ்சம் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துக் கொடுத்துப் போகும் கலையை கற்றுத் தருவதாக அமையும். 
 
பரிகாரம்
 
திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஜம்புகேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் ரேவதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழைக் கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.