1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:29 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி!

கல் நெஞ்சக்காரர்களையும் களங்கமற்ற சிரிப்பால் கரைய வைக்கும் நீங்கள், கலா ரசனை மிக்கவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைச்சுமையையும், உங்களைப் பற்றிய அவதூறுப் பேச்சுக்களையும், கௌரவக் குறைவான சம்பவங்களையும் அவமானத்தையும் ஏற்படுத்திய குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் இப்போது என்னவாகுமோ, அடுத்தது என்ன நடக்குமோ என்று அச்சத்தால் கூனிக்குறுகி, ஒதுங்கியிருந்த நீங்கள், இனி வெளியுலகத்திற்கு வருவீர்கள். 
 
எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறினீர்களே! குடும்பத்திலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிரச்னை வந்ததே! இனி அவற்றிற்கெல்லாம் லாப ஸ்தான குருபகவான் நல்ல தீர்வுகளை தருவார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள்.
 
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிட்டும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். 
 
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக் கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

தாயாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். ஷேர் மூலமாக பணம் வரத் தொடங்கும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். தோல்விமனப்பான்மை, கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் உங்களை தாக்கிப் பேசியவர்கள் இனி புகழ்வார்கள்.        

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி இனி தெளிவு பிறக்கும். மழலை பாக்யம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவார்.
 
 உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் சுக-சப்தமாதிபதியான குருபகவான் தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். அவருடன் வீண் விவாதங்களும் வரக்கூடும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள், பிரேக்கெல்லாம் சரி பார்த்துச் செல்வது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.  
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் பயனடைவீர்கள்.  
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை உங்களின் ராசியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அழகு, அறிவுக் கூடும். குடும்பத்திலும் சந்தோஷம் குடிக்கொள்ளும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் செல்வாக்கு உயரும். பெரிய பதவியில் இருக்கும் உங்களுடைய பழைய நண்பரால் ஆதாயமடைவீர்கள். 
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 12-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.     
 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள். 
 
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தை தெரிந்துக் கொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது. என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.
 
உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம், எதிர்ப்புகள் இருந்ததே! உங்களுக்கு எதிராக சில அதிகாரிகளும், சக ஊழியர்களும் வேலைப் பார்த்தார்களே! அந்த நிலையெல்லாம் மாறும். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். அவரிடமிருந்து அலுவலக ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடையே உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கு தள்ளுபடியாகும்.
 
கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கல்யாணமும் கூடி வரும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். புது உத்தியோகம் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். 
 
மாணவ-மாணவிகளே! ஏனோ தானோ என்று படிக்காமால் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பெண் உயரும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். சக மாணவர்களின் அன்பை பெறுவீர்கள்.  
  
கலைத்துறையினரே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! இனி துளிர்த்தெழுவீர்கள். பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.
 
இந்த குருமாற்றம் பதுங்கியிருந்த உங்களை பிரபலமாக்குவதுடன், பண வசதி, சொத்து சேர்க்கையையும் தருவதாக அமையும்.  
 
பரிகாரம்
 
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரதோஷ நாளில் வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.