வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:32 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்!

பிரதிபலன் பாராமல் உதவும் நீங்கள், கடின உழைப்புக்குச் சொந்தக்காரர்கள். இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து கூறாக்கிப் போட்டாரே குருபகவான். பல கஷ்ட, நஷ்டங்களை தந்து, மறைமுக எதிர்ப்புகளால் உங்களை திணறடித்து, கடன் பிரச்னைகளால் தூக்கத்தை குறைய வைத்த குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். 
 
வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். 
 
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். 
 
மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளின் திருமணத்தை எல்லோரும் மெச்சும் படி நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.  
 

குருபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். 
 
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரங்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள்.
      
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் விரையாதிபதியும்-சேவகாதிபதியுமான குருபகவான் தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் உங்களை தூண்டி விடுவார்கள். கொந்தளித்து வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள்.  
 
  29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் ராசிநாதனும்-தனாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்ததை தந்து முடிப்பீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். புது வேலைக் கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் சேர்ந்து பொது சேவைகள் செய்ய தொடங்குவீர்கள். போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் பலனடைவீர்கள். 
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை உங்களின் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்த-பந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும்.
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்துச் செல்லும்.   
 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.
 
வியாபாரத்தில் அடுத்தடுத்து சில நஷ்டங்களை சந்தித்தீர்களே! எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! பலரிடம் ஏமாந்தீர்களே! இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வருவார். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. புரோக்கரேஜ், ஏற்றுமதி-இறக்குமதி, கண்ஸ்ட்ரக்ஷன், பதிப்பகம், கட்டிட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.  
 
உத்தியோகத்தில் ஓடி ஒடி வேலை பார்த்தும் கெட்டப் பெயர்தானே கிடைத்தது! இனி முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் மனசு மாறும்.  
 
கன்னிப்பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். காதல் கைகூடும். வேலைக் கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.  
 
மாணவ-மாணவியர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள்.  
 
கலைத்துறையினரே! எதிர்பார்த்து ஏமாந்துப் போன வாய்ப்பு இப்போது கூடி வரும். வருமானம் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். 
 
இந்த குரு மாற்றம் வாடி வதங்கிப் போயிருந்த உங்களை வளமைப்படுத்துவதுடன் வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும். 
 
பரிகாரம்
 
கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசக்கரபாணிப் பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள்.