வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2017 (18:05 IST)

இய‌ற்கையு‌ம் ம‌னிதனு‌ம்

கேள்வி : ஆத்திகர்கள் அல்லவா பூஜைக்காகப் பூக்களைப் பறிப்பது, மிருகங்களைப் பலியிடுவது, இயற்கையை அழிப்பது போன்றவற்றைச் செய்கிறார்கள்?




அம்மா : "இறைவா! அடுத்த வீட்டுக்காரனைக் குருடனாக்க வேண்டும், அவன் வேலையை இழக்கச் செய்ய வேண்டும், அவனை அழிக்க வேண்டும்" என்பதுபோல் பிரார்த்தனை செய்பவர்களை ஆத்திகர்கள் என்று அழைக்கக்கூடாது. தனது நலனிற்காக இறைவனை அவர்கள் ஒரு கருவியாக ஆக்குகிறார்கள். துரோக சிந்தனை உள்ளவர்களின் கடவுள் நம்பிக்கை, தூய பக்தியிலிருந்து தோன்றுவதல்ல. அது தனது காரியம் நடப்பதற்காகக் காட்டும் பொய்யான நம்பிக்கையாகும்.

உண்மையான பக்தன் இறைவனின் நோக்கத்தை உணர்ந்து, அதற்கேற்பச் செயல்படுவான். இடதுகை காயமடைந்தால் வலதுகை ஆறுதல் அளிக்க வருவதுபோல், பிறரது துயரைக் கண்டு, தன்னை மறந்து உதவ ஓடிச்செல்லும் மனோபாவம் அவனுக்கு இருக்கும். உண்மையான ஆத்திகன் இயற்கையையும், மனிதரையும் இறைவனின் பிரத்யட்ச வடிவமாகக் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யவும், அன்பு செலுத்தவும் செய்கிறான். அவன் யாரையும் தன்னிலிருந்து வேறுபட்டவராகக் காண்பதில்லை. பிறரது குற்றம், குறைகளைக் காணாமல், பிறரது தவறுகளை மன்னிக்கும் திறனுள்ள இதயத்தில்தான் இறைவனால் வசிக்க முடியும்.

அந்த அளவு கருணை உள்ள மனமுடைய ஒருவனால் இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காக எங்ஙனம் மிருகபலியும், பிறவும் நடத்த முடியும்? தனது மனதில் உள்ள மிருகத்தனமான வாசனைகளையே அவன் இறைவனுக்குப் பலியிடுவான். தனது அகந்தையையே கொல்வான்.

குழந்தைகளே, ஹிம்சை என்பது இயற்கை நியதியின் ஒரு பாகமாகும். அதை முற்றிலும் நீக்கமுடியாது. தனது உணவிற்காக வேட்டையாடுவதையும், இதுபோன்ற பிறவற்றையும் அதர்மம் என்று கூறமுடியாது. ஆனால், தேவைக்கதிகமாக எதையும் அழிப்பது ஹிம்சையாகும். ஒருவன் கஞ்சி குடிப்பதற்காக ஒரு பலா இலையைப் பறிப்பது தவறல்ல. ஆனால் அதற்காக ஐந்தாறு இலைகளைப் பறிப்பது அதர்மமாகும். இவ்வாறு, இறைவனுக்குப் பூஜை செய்வதற்காகச் செடிகளை நட்டு, நீர்விட்டு வளர்ந்து அவற்றிலிருந்து பூக்களைப் பறிப்பதைத் தவறென்று கூறமுடியாது.

துளசிச் செடிக்கு நீர்விடும்போது பக்தன் ஒருவன் ஸ்ரீ கிருஷ்ணனையே வணங்குகிறான். அரச மரத்தைச் சுற்றிவரும் போதும், பசுவிற்குப் புல் கொடுக்கும் போதும் அவனது மனம் கிருஷ்ணனிடம்தான் லயித்திருக்கிறது. வில்வ மரத்திற்கு உரமிடுகையில் அது சிவனை மகிழ்விக்கும் என்றே சிவபக்தன் நம்புகிறான். இயற்கையை வழிபடுவதன் மூலம் பன்மை நிறைந்த இவ்வுலகில் உள்ள ஏகமான மெய்ப்பொருளைத் தரிசிக்க அவனால் முடிகிறது.

வழிபடுவது என்றால் தொட்டு வணங்கி, நமஸ்கரிப்பது என்பதல்ல, பறவை மிருகங்களையும், செடிகொடிகளையும் அன்போடு கவனிப்பது, பராமரிப்பதும் முன்பு இறை வழிபாட்டின் ஒரு பாகமாக இருந்தது. காலையில் எழுந்ததும் குளத்தில் குளித்துவிட்டு வந்து துளசிச் செடி, அரச, வில்வ மரங்களுக்கு நீர்விட்டு வலம் வந்து வணங்குவதும், அகல்விளக்கில் எண்ணெய் ஊற்றி, விளக்கேற்றி இறை நாமங்களைப் பாடுவதும், சூரிய உதயகாலத்தில் கிழக்கு நோக்கி நின்று சூரிய நமஸ்காரம் செய்வதும் உடல் மற்றும் மனதின் சோர்வைப் போக்கவும், புத்திக்கு உற்சாகம் மற்றும் ஆரோக்கியத்தை நல்கவும் மிகவும் உதவின.

தினசரி அனுஷ்டானங்களின் ஒரு பாகமாக இருந்த இவை நம் முன்னோர்களின் கவனத்தையும், விவேக புத்தியையும் வளர்த்துக்கொள்ள உதவின. இதுபோன்ற அனுஷ்டானங்களின் மூலம் மனதின் இறுக்கம் அகன்று, அமைதியும், நிம்மதியும், உற்சாகமும் கிடைக்கிறது. இன்று நம்மில் எத்தனை பேர் தினமும் சூரிய உதயத்தையும், பூக்கள் மலர்வதையும் பார்க்கிறோம்? பறவைகளின் கலகலவென்ற சப்தத்தைக் காது கொடுத்துக் கேட்பவர் எத்தனை பேர்?